அரசு மருத்துவமனைகளில் உள்ள நர்ஸ் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி, நாமக்கல்லில் செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள நர்ஸ் பணியிடங்களை நிரப்பாமல் பணி நிரவல் முறையில், செவிலியர்களை பணியிடமாற்றம் செய்யப்பட்டு அதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே பணிச்சுமையால் இயங்கி வரும் அரசு மருத்துவமனைகளில் மேலும் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து செவிலியர்களை பணி நிரவல் மூலம் இடமாற்றம் செய்வதால் மருத்துவமனைகள் செயல்பாட்டில் பெரும் தாக்கம் ஏற்படும்.
இதனால் ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தும் நிலை எட்டாக்கனியாகும். இதுபோன்ற செயல்களைக் கைவிட்டு தேவையான செவிலியர் பணியிடங்களை உருவாக்கி புதிய செவிலியர்களை பணியமர்த்தி அரசு மருத்துவமனைகளின் செயல்பாட்டை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி செவிலியர்கள் கோஷங்களை எழுப்பினர்.




