தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியலில் ஒரு தொங்கு சட்டசபை போன்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தவெக குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றுள்ள போதிலும், தனித்துப் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 இடங்களை எட்டவில்லை.
இந்த நிலையில், விஜய்யின் தவெக ஆட்சி அமைக்கப் போகிறதா அல்லது வேறு கட்சிகளின் ஆதரவைப் பெறப்போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் முடிவுகளின்படி, தவெக பல தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கான “மேஜிக் நம்பர்” எனப்படும் 118 இடங்கள் என்ற பெரும்பான்மை பலம் அக்கட்சியிடம் இல்லை. இதனால், கூட்டணி அல்லது வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் கட்சிகளின் தேவை விஜய்க்கு ஏற்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழலில் விஜய் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும், மேலும் சபாநாயகர் தவெகவை சேர்ந்தவராக இருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் கலந்து கொள்ள முடியாது. இந்த சூழலில் தவெகவின் பலம் 106 என குறையும். அதற்கு தவெகவிற்கு 12 உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும்.
இந்த இக்கட்டான சூழலில், எந்தெந்த கட்சிகள் விஜய்யை ஆதரிக்கக் கூடும் என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன: தமிழகத்தின் இரு பெரும் துருவங்களான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் விஜய் கூட்டணி அமைக்க வாய்ப்பு மிகக் குறைவு என்றே கருதப்படுகிறது. ஏனெனில், இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாகவே தவெக தன்னை முன்னிறுத்தியது. இருப்பினும், ஆட்சி மாற்றத்தை விரும்பும் சூழலில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காங்கிரஸ் அல்லது பாஜக போன்ற தேசியக் கட்சிகள், தங்களின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு விஜய்க்கு ஆதரவு அளிக்க முன்வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் காங். 5, விசிக 2, கம்யூனிஸ்ட் கட்சிகள் 4, தேமுதிக 1 என 12 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு ஆட்சி அமைப்பதில் மிக முக்கியப் பங்காற்றும். அவ்வாறு காங். ஆதரவை கோரி அமைச்சர் பதவி அளித்தால் 1967க்கு பிறகு காங். தமிழக அமைச்சரவையில் இடம்பெறும்.
ஆனால் ஐந்து கட்சிகளின் ஆதரவை நாடி ஆட்சி அமைத்து அவர்களுக்கு அமைச்சர் பதவி தருவதைவிட விஜய் அதிமுகவிடம் ஆதரவு கேட்கலாம். ஆட்சியில் பங்கு இல்லாமல் வெளியில் இருந்து ஆதரவு அளிக்குமாறு கோரலாம்.
மேலும், அதிமுக அல்லது திமுக நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்.
“மக்களுடன்தான் கூட்டணி” என்று தேர்தல் பிரசாரத்தின் போது முழங்கிய விஜய், இப்போது ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலான சூழலை எப்படிக் கையாளப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு கூட்டணி ஆட்சி அமைப்பாரா அல்லது தார்மீக அடிப்படையில் எதிர்க்கட்சி வரிசையில் அமருவாரா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் உள்ளார்.
பெரிய கட்சி என்ற அடிப்படையில் கவர்னர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பாரா அல்லது பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக உள்ள வேறொரு கூட்டணியை அழைப்பாரா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
தமிழக அரசியலில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகப் பார்க்கப்படுகிறது. ஒரு புதிய கட்சி ஆட்சி பீடத்தை நெருங்கியுள்ள நிலையில், முட்டுக்கட்டையாக இருக்கும் பெரும்பான்மை விவகாரத்தை விஜய் எப்படித் தகர்க்கப்போகிறார் என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.




