Close
ஏப்ரல் 24, 2026 2:28 காலை

அவிநாசியில் 75,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி: மத்திய இணை அமைச்சர் முருகன்

அவிநாசியில் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் முருகன்

அவிநாசி தொகுதியில் 75,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என, நாமக்கல்லில் மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர், அவிநாசி சட்டசபை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை 6ம் தேதி அவர் அங்கு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

இதையொட்டி இன்று அமைச்சர் முருகன் நாமக்கல் வந்தார். நாமக்கல் அருகே உள்ள தனது குல தெய்வம் கோயிலில் அவர் குடும்பத்துடன் வழிபாடு செய்தார். பின்னர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அவர் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முதல்வராக பதவியேற்பார்.

கடந்த 5 ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் விலைவாசி, மின்சார கட்டண உயர்வால், சிறு-குறு, நடுத்தர தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா, போதை பொருள்கள் நடமாட்டம் கிராம அளவில் கூட அதிகரித்து விட்டது.

டில்லியில் நேரு குடும்பம் போல், தமிழகத்தில் கருணாநிதி குடும்பம் குடும்ப ஆட்சி நடத்துகிறது. முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் தவிர அக்கட்சியில் சாதாரண தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பா.ஜ., வில் சாதாரண தொண்டர்கள் கூட இன்று வேட்பாளர்களாக, நிர்வாகிகளாக உள்ளனர்.

தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வரவில்லை. அதனால் தி.மு.க., அரசு மீது, சத்துணவு பணியாளர்கள், நர்சுகள், டாக்டர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிருப்தியும், கோபமும் கொண்டுள்ளனர்.

அவிநாசி தொகுதியில், 75,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்கள் வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. மத்திய அரசு நிதி பெற்று, அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தை அன்றைய முதல்வர் இ.பி.எஸ்., திட்டத்தை நிறைவேற்றினார். தி.மு.க., அரசு அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி இருந்தால், விவசாயிகளுக்கு தேவையான நீர், பொதுமக்களுக்கு குடிநீர் கிடைத்திருக்கும்.

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து, அத்திக்கடவு – அவிநாசி 2.0 திட்டத்தை செயல்படுத்தி, அனைத்து குளம் குட்டைகளில் தண்ணீரை நிரப்பி, அப்பகுதிகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டு, விவசாயத்திற்கு தேவையான நீர் வழங்குவோம்.

ராசிபுரத்தில் முதல் முறையாக பா.ஜ.க, போட்டியிடுகிறது. 234 தொகுதிகளும், அ.தி.மு.க., – பா.ஜ.க, – பா.ம.க., உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து தலைவர்களும் பிரச்சாரத்திற்கு வர உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்சியில் பா.ஜ.க நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தலைவர்கள் சரவணன், ராஜேஸ்குமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top