திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் சுதாகரை அறிமுகப்படுத்தும் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார். எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வடமதுரை ரமேஷ், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னிகைப்பேர் டி.கே.குமார், ஒன்றிய அவைத்தலைவர் விஜயன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் லட்சுமிகிரி, சுபா, கிளை செயலாளர் பார்த்திபன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது ஒன்றிய துணைச் செயலாளர் சுபா மற்றும் கிளை செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட சிலரது பெயரை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறவில்லை.இதனால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுபா மற்றும் பார்த்திபனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதை வலியுறுத்தி கூடியிருந்த தொண்டர்கள் கூச்சலிட்டனர்.
அப்பொழுது ஒன்றிய துணைச் செயலாளர் சுபா இந்நிகழ்ச்சிக்கு தங்களுக்கு முறையான அழைப்பு இல்லை. மேலும், இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அழைத்து வந்தும் எனக்கு பயனில்லை. இது நியாயமா? இவ்வாறு கட்சியின் மூத்த நிர்வாகிகள் நடந்து கொண்டால் நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் எங்களது பகுதியில் எவ்வாறு? சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க முடியும்? என்று சரமாரியாக வேட்பாளரிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த செயலால் கூட்டத்தில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது. இதன் பின்னர், மூத்த நிர்வாகிகள் ஒன்றிய துணைச்செயலாளர் மற்றும் கிளைச் செயலாளரை சமாதானம் செய்து இனிவரும் காலங்களில் உரிய மரியாதை வழங்கப்படும் என்று கூறி சமாதானப்படுத்தினர். இதனால் கூட்டத்தை உடனடியாக பாதியில் முடித்துவிட்டு அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.




