Close
மே 26, 2026 10:10 மணி

நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூலை 17ல் துவக்கம்

நாமக்கல்லில் நடைபெற்ற, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்களுக்கான பயிற்சியில், கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்

நாமக்கல் மாவட்டத்தில், வரும், ஜூலை 17ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்குகிறது. 3,540 கணக்கெடுப்பாளர்கள், 472 மேற்பார்வையாளர்கள் என, மொத்தம், 4,012 பேர் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்தியாவில், முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1872ம் ஆண்டு நடத்தப்பட்டது. தற்போது, நாட்டின், 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகவும், சுதந்தரத்திற்கு பின், 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகவும் இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில், சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறை கணக்கெடுப்பு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தாங்களாகவே வெப்சைட் மூலம், தங்கள் விபரங்களை தெரிவிக்கும் சுய கணக்கெடுப்பு வரும் ஜூலை 17 முதல், 31 வரை நடைபெறும்.

மேலும், கணக்கெடுப்பாளர் மூலம், வீடுகள் தோறும் நேரில் சென்று மேற்கொள்ளப்படும், வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள், வரும், ஆக. 1 முதல், 30 வரை நடக்கிறது. மாவட்டத்தின் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக, மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநகராட்சி பகுதிக்கு முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக, மாநகராட்சி ஆணையர், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில், பொறுப்பு அலுவலர்களாக, 8 வட்டாட்சியர்கள், 4 நகராட்சி ஆணையர்கள், 19 பேரூராட்சி செயலாளர்களும் செயல்பட உள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணியாளர்களாக, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் 3,068 கணக்கெடுப்பாளர்கள், 472 மேற்பார்வையாளர்கள், வீடுகள் தோறும் சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027-க்கான பயிற்சி வகுப்பு நடந்தது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். இப்பயிற்சி வகுப்பு 3 நாட்கள் நடக்கிறது.

சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரக உதவி இயக்குனர் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. ‘பயிற்சியில் பங்கேற்றுள்ள அனைத்து அலுவலர்களும், நல்ல முறையில் பயிற்சி எடுத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி அறிவுறுத்தினார்.

சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர் பிஜி, டி.ஆர்.ஓ., சரவணன், ஆர்.டி.ஓ., சாந்தி உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top