நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 27, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரவு பகலாக 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர்.
பண்டிகை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பணியாளர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். விபத்து, இயற்கை பேரிடர்கள் மற்றும் தீவிர நோய் பாதிப்பு நேரங்களில் விரைவாக சம்பவ இடத்திற்கு சென்று மக்களை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
108 பணியாளர்களைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் மே மாதம் 26ம் தேதி 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஒன்று கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.
தொடர்ந்து மருத்துவ துறை இணை இயக்குனர் வாசுதேவன், சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் டிரைவர் அகிலனைப் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட மேலாளர் அம்பிகாசன், சேலம் மண்டல வாகன பரிசோதகர் கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




