தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என பாரதீய கிசான் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, பாரதீய கிசான் சங்க, மாநில இளைஞரணி தலைவர் பாலசுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
தமிழகத்தில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, உர விலையேற்றம், லாபமற்ற விற்பனை விலை, பருவம் தவறிய மழை, வறட்சி உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்தித்து பெரும்பாலான விவசாயிகள் கடனாளியாகி விட்டனர். பலர் தங்கள் விளைநிலங்களை விற்பனை செய்து கடனை அடைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகளை அரவணைப்போம் என ஏற்கனவே அறிவித்த, தற்போதைய தமிழக அரசு, இப்போது அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசின் கஜானா காலி, சுமார் 10.5 லட்சம் கோடி கடன் எனத் தேர்தலுக்கு முன்பே தெரிந்தும், 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு 100 சதவீதம் கடன் தள்ளுபடி எனவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி என தேர்தல் வாக்குறுதி அளித்து விவசாயிகளை நம்ப வைத்து இந்த அரசு ஏமாற்றி உள்ளது.
தமிழக அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பு, எந்த விவசாயிக்கும் துளி கூட பயனளிக்காது. இது ஒரு கண்துடைப்பு நாடகம். செய்ய இயலாததை ஏன் தேர்தல் வாக்குறுதியாக அளிக்க வேண்டும்?
எந்தவொரு ஆதரவும் இல்லாமல் நாட்டு மக்களின் உணவுத் தேவையை, தனது உழைப்பின் வியர்வை மூலம் பூர்த்தி செய்து வரும் விவசாயிகளை ஏமாற்றி, அவர்களின் கோபத்துக்கு ஆளாகி விட்டது இந்த அரசு. இதற்கான பலனை எதிர்காலத்தில் சந்திக்கும்.
தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு உடனடியாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

