கல்பனா சாவ்லா விருது பெற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீர மங்கையர் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், 2026- ஆம் ஆண்டிற்கு பெண்களில் துணிச்சலான வீர சாகசச் செயல் புரிந்தோர்களுக்கு மாநில அளவில் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது.
இதற்காக, பெண்களில் துணிச்சலான வீர சாகசச் செயல் புரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் தங்களது முழு விவரங்களுடன் வருகிற ஜூன் 19க்குள், தமிழக அரசின் விருதுகள் வெப்சைட்டில் இண்டர்நெட் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதன் 3 நகல்களை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கையேடாக தயார் செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு முன் உதாரணமாக துணிச்சலான வீர சாகசச் செயல் புரிந்து இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் சுய விபரம், சுய சரிதை, 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் ஒரு பக்க அளவில் தனியாரைப் பற்றிய விபரம் ஆங்கிலம் மற்றும் தமிழில் சாஃட் காப்பி மற்றும் ஹார்ட் காப்பியுடன் 3 பிரதிகள் அனுப்ப வேண்டும்.
இது குறித்த மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவகத்தை நேரிலோ, 04286-299460 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.




