Close
மே 30, 2026 11:34 மணி

அடுத்த 5 ஆண்டுகளில் உலக வெப்பநிலை அதிகரிக்கும்: ஐநா எச்சரிக்கை!

உலக அளவில் தற்போதைய வெப்பநிலையே மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை, இதுவரை இல்லாத அளவிலான புதிய உச்சங்களைச் தொடும் என்று ஐநாசபையின் புதிய காலநிலை கணிப்புகள் எச்சரித்துள்ளன.

உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி, இப்போதிருந்து 2030-ஆம் ஆண்டிற்குள் ஆர்க்டிக் பகுதி மிகக் கடுமையான வெப்பமடைதலைச் சந்திக்கும் என்றும், பூமியின் இயற்கை அரணாக விளங்கும் அமேசான் காடுகளில் ஆபத்தான வறட்சியும் காட்டுத்தீயும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை மனிதர்கள் தொடர்ந்து எரிப்பதால், உலகம் முழுவதும் வெள்ளம், வறட்சி மற்றும் கடுமையான வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஐநாவின் காலநிலை ஏஜென்சி மற்றும் யூகே வானிலை அலுவலகம் இணைந்து வெளியிட்டுள்ள இந்த கணிப்புகளின்படி, வரும் 2026 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில் பூமியின் சராசரி உலகளாவிய வெப்பநிலை, தொழில்துறை புரட்சிக்கு முந்தைய காலத்தை விட 1.5°செ (2.7 டிகிரி ஃபாரன்ஹீட்) அதிகமாக இருப்பதற்கு 75 சதவீத வாய்ப்புகள் உள்ளன. இந்த 1.5°செ என்ற வரம்பு தான் 2015-ஆம் ஆண்டின் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் உலக நாடுகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட பாதுகாப்பான இறுதி வரம்பாகும்.

இந்த வரம்பைத் தாண்டுவது என்பது மனித உயிரிழப்புகள், இயற்கை ஆபத்துகள் மற்றும் பல அரிய உயிரினங்களின் அழிவுக்குக் வழிவகுக்கும் என்று ஐநா எச்சரித்துள்ளது. ஒரு டிகிரியில் சில தசமப் புள்ளிகள் தானே கூடுகிறது என்று சாதாரணமாக நினைத்தாலும், பவளப்பாறைகள்  மற்றும் பனிப்பாறைகள் போன்ற பூமியின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளால் இந்த வெப்ப அழுத்தத்தைத் தாங்க முடியாது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏதேனும் ஒரு ஆண்டு 1.5°செ என்ற வெப்பநிலை வரம்பைத் தாண்டிச் செல்வதற்கு 91 சதவீத வாய்ப்பு உள்ளது. மேலும், 2024-ஆம் ஆண்டில் பதிவான பூமியின் மிக அதிகபட்ச வெப்ப சாதனையை, வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளில் ஏதேனும் ஒரு ஆண்டு முறியடிப்பதற்குக் 86 சதவீத வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

“இந்த 1.5°செ வரம்பைத் தாண்டுவது என்பது நாம் ஏதோ ஒரு பெரிய பள்ளத்தாக்கில் திடீரென விழுந்துவிடுவது போன்றது அல்ல. மாறாக, உயரும் ஒவ்வொரு 0.1°செ வெப்பநிலையும் மெல்ல மெல்ல மிகக் கடுமையான மற்றும் மோசமான பாதிப்புகளைத் தொடர்ச்சியாக ஏற்படுத்தும்” என்று இந்த அறிக்கையின் இணை ஆசிரியரும், பிரிட்டன் வானிலை அலுவலகத்தின் காலநிலை விஞ்ஞானியுமான மெலிசா சீப்ரூக் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்தமாக ஒரு ஆண்டு முழுவதும் 1.5°செ வரம்பிற்கு மேல் வெப்பநிலை நீடித்தால், அது நாம் இதற்கு முன் அனுபவித்திராத மிக மோசமான வறட்சி அல்லது கனமழையைக் கொண்டுவரும். இது பல மனித உயிர்களைப் பறிப்பதுடன், உணவுப் பொருட்களின் விலையை அதிரடியாக உயர்த்தும், கடுமையான காட்டுத்தீயையும் ஏற்படுத்தும் என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானி பிரீடெரிக் ஓட்டோ எச்சரித்துள்ளார்.

மத்திய பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இயற்கையான வெப்பமடைதல் நிகழ்வான ‘எல் நினோ’  நடப்பாண்டில் வலுவடைந்து, அது 2028 வரை நீடிக்கக்கூடும் என்பதால், வரும் 2027ம் ஆண்டு வரலாற்றின் மிக வெப்பமான ஆண்டாக மாற அதிக வாய்ப்புள்ளது.

ஆர்க்டிக் மற்றும் அமேசான் காடுகளுக்கு வரும் ஆபத்து

13 நாடுகளின் பல்வேறு மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆர்க்டிக் பகுதியில் சூரியக் கதிர்வீச்சை விண்வெளிக்குப் பிரதிபலிக்கும் பனி மற்றும் பனிப்பாறைகள் உருகி வருவதால், பூமியின் மற்ற பகுதிகளை விட ஆர்க்டிக் பகுதி 3.5 மடங்கு வேகமாக வெப்பமடையும் என்று சீப்ரூக் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அமேசான் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறான வறண்ட மற்றும் வெப்பமான சூழல் நிலவக்கூடும். வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் அமேசான் காடுகள், இந்த வறட்சியால் காட்டுத்தீக்கு ஆளாகி, கார்பனை வெளியிடும் ஒரு ஆபத்தான பகுதியாக மாறக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மறுபுறம், ஆப்பிரிக்காவின் வறண்ட சாகேல் பகுதியில் வழக்கத்தை விட அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

பூமியின் வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் எடுக்கும் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்று ஐநா அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஐநாவின் காலநிலைத் தலைவர் சைமன் ஸ்டீல் கூறுகையில், உலகளாவிய வெப்பமயமாதல் வேகம் நம் கட்டுப்பாட்டு முயற்சிகளை விட வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பா, இந்தியா மற்றும் பிற இடங்களில் நிலவும் கடுமையான கோடை வெப்பம், மனிதகுலம் இன்னமும் பெருமளவில் நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவை எரித்து வருவதன் கொடூரமான விளைவைக் காட்டுகிறது. தீவிர வெப்ப அலையோ, சூறாவளியோ, வெள்ளமோ அல்லது வறட்சியோ, எதுவாக இருந்தாலும் இன்று ஒவ்வொரு நாடும் இந்த உலகளாவிய காலநிலை நெருக்கடிக்கு மிகப்பெரிய விலையைக் கொடுத்து வருகின்றன என்று வேதனை தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top