Close
ஜூலை 17, 2026 2:12 காலை

தூசூர் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும்: கலெக்டருக்கு மாவட்ட காங்கிரஸ் கோரிக்கை

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் செந்தில்

நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரியை உடனடியாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் செந்தில், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது;

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான தூசூர் ஏரி, பல ஆண்டுகளாக சுற்றுவட்டார கிராமங்களின் விவசாயம், நிலத்தடி நீர் வளம், குடிநீர் ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் பங்களிப்பு செய்து வருகிறது. ஆனால் தற்போது ஏரி முற்றிலும் வறண்ட நிலையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில், ஏரியை தூர்வாரி, புதர்மண்டலங்களை அகற்றி, நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்து, கரைகளை பலப்படுத்தி, அதன் பழமையான நீர்த்தேக்க கொள்ளளவை மீட்டெடுப்பதற்கு இதுவே மிகவும் ஏற்ற காலமாகும்.

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் ஏரியில் அதிகளவில் வண்டல் மண் தேங்கி, நீரை சேமிக்கும் திறன் பெருமளவில் குறைந்துள்ளது. மேலும், ஏரிக்குள் பரவியுள்ள முள் மற்றும் புதர்களும் நீர்த்தேக்கத்திற்கு தடையாக உள்ளன. தற்போது ஏரி வறண்டிருப்பதால், இவற்றை எளிதாக அகற்றி சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியும்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வுகளின்படி, எதிர்காலத்தில் கடுமையான நீர் பற்றாக்குறையை சந்திக்கக்கூடிய மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டமும் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு பெய்யவுள்ள மழைநீரை முழுமையாக சேமிக்க, தற்போது நீர்நிலைகளை சீரமைப்பது அவசியமாகிறது.

தூசூர் ஏரி முழுமையாக சீரமைக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயரும், சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தியாகும், விவசாயம் வளர்ச்சி பெறும். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மழைக்காலம் தொடங்கும் முன்பே தூசூர் ஏரியை முழுமையாக தூர்வாரி அதன் இயல்பான நீர்த்தேக்க கொள்ளளவை மீட்டெடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top