Close
ஜூன் 13, 2026 10:38 காலை

திருவண்ணாமலை கோயிலில் விஐபி தரிசனம் ரத்து: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

நீச்சல் குளத்தை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜீனா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலையில், விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

மேலும், விஐபிக்களுக்கென்று தனி வரிசை இல்லாமல் அனைவரும் சமத்துவமாக வழிபாடு செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், எஸ்பி சுதாகர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: தமிழ்நாட்டில் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். பௌர்ணமி நாளில் 5 லட்சம் முதல் 10 லட்சம் பேரும், தீபத்திருவிழாவுக்கு 25 லட்சம் பேரும் வருகின்றனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள் வருகை 50 லட்சமாக அதிகரித்தால் என்ன செய்ய போகிறோம், அதற்காக என்ன திட்டமிடப்போகிறோம் என ஆய்வு செய்தோம். திருவண்ணாமலைக்கு செல்லும் அனைத்துச் சாலைகளும் நான்கு வழிச்சாலைகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா  திருவண்ணாமலை மாவட்டத்தில் விளையாட்டு அரங்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆட்சியர், துறைச்சார்ந்த அரசு உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திருவண்ணாமலை மாவட்டத்தில் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவு கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

குறிப்பாக கள்ளச்சாராயம் கடத்தலைத் தடுக்கும் வகையில் மாவட்ட எல்லைகளை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும். கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடமாவட்டங்களில் பெண் குழந்தைகளின் மேற்படிப்புத் தடைப்பட்டுள்ளது. அதனை உடைத்து மேற்படிப்பு பயிலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலையை உருவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாவட்டங்களில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

இன்று காலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை நேரில் பார்வையிட்டேன். திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவதால் திருவண்ணாமலைக்கு செல்லும் அனைத்துச் சாலைகளும் நான்கு வழிச்சாலைகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வளர்ச்சிப் பணிகளை உடனுக்குடன் விரைவாக அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைச் சார்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட வருவாய் அலுவலர் ராம பிரதிபன், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top