கடும் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு வராமல் தவிர்க்க, நாமக்கல் மாநகராட்சியில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, நாமக்கல் மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாநகராட்சியுடன், இணைக்கப்பட்ட 12 கிராம ஊராட்சிகள் மற்றும் ஏற்கனவே உள்ள 39 வார்டு பகுதிகளுக்கு மோகனூர் குடிநீர்த்திட்டம் மற்றும் ஜேடர்பாளையம் குடிநீர் திட்டம் மூலம் காவிரி ஆற்றினை நீர் ஆதாரமாக கொண்டு தினசரி 32.80 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, கோடை காலம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக கடும் வறட்சியினால், காவிரி ஆற்றில் குடிநீர் வரத்து குறையத் தொடங்கி உள்ளதால், நாமக்கல் மாநகராட்சியால் வழங்கப்பட்டு வரும் குடிநீரை, இணைப்பு பெற்றுள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும்.
மேலும், குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது மற்றும் குடிநீர் கட்டுப்பாட்டு கருவியை கழற்றி விட்டு குடிநீர் பிடிப்பது, குடிநீர் பிடித்த பிறகு, குடிநீரை கேட் வால்வ் வைத்து அடைக்காமல், தோட்டத்திற்கு விடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும்.
எனவே, குடிநீர் இணைப்புதாரர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மின்மோட்டார் பறிமுதல், குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




