Close
ஜூலை 28, 2026 7:29 மணி

வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்வதை நிரந்தரமாக தடை செய்யவேண்டும்: மணல் லாரி சம்மேளனம் கோரிக்கை

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செயற்கை மணல், ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் கொண்டுசெல்வதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் நாமக்கல் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சம்மேளன தலைவர் செல்ல. ராசாமணி தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா மாநிலஙகளுக்கு தினசரி நூற்றக்கணக்கான லாரிகளில் எம்.சேண்ட், பி.சேண்ட், ஜல்லிகள் உள்ளிட்ட கனிமங்கள் கடத்தப்பட்டு வந்தன. கேரள, கர்நாடக மாநிலத்தில் கல் குவாரிகள் அமைக்க தடை இருப்பதால் தமிழகத்தில் இருந்து கனிமங்கள் போலி பர்மிட் மூலம் கடத்தப்பட்டு வந்தன. இதனால் தமிழ்நாட்டில் கட்டுமானப்பணிக்கான எம்.சேண்ட், பி.சேண்ட், ஜல்லி கற்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

மேலும், தமிழகத்தில் இயற்கை வளமும் கொள்ளை போனது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கடத்துவதை தடை செய்ய வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக இருந்தஅதிமுக மற்றும் திமுக அரசுகளிடம் மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் வைத்தும் போராட்டம் நடத்தியும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போதைய தவெக அரசிடம் கடந்த மாதம் இது குறித்து கோரிக்கை மனு அளித்தோம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கடந்த 27ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு தமிழகத்தில் இருந்து கனிமங்கள் கொண்டு செல்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல நிரந்தரமாக விதிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தரமான எம்.சேண்ட், பி.சேண்ட் கிடைக்கும் வகையில் தமிழக அரசு கல் தனியார் குவாரிகளை ஆய்வு செய்து, விற்பனையை முறைப்படுத்த வேண்டும்.

கடந்த 2023ம் ஆண்டு மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் ரெய்டு நடத்தியது. இதையொட்டி மணல் குவாரிகள் மூடப்பட்டன. அதன் பிறகு திறக்கவேயில்லை. இதனால் கட்டுமானப்பணிகளுக்கு மணல் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே ஆறுகளில் மணல் குவாரிகளை திறந்து, அரசே நேரடியாக மணல் விற்பனை செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 6 மணல் குவாரிகளை திறந்து, அரசு மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top