Close
ஜூன் 25, 2026 1:47 காலை

குடியிருப்பு பகுதிகளுக்கு, பள்ளி அருகே கள்ளத்தனமாக மது விற்பனை: பெரியபாளையம் மக்கள் வேதனை

பெரியபாளையம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு, பள்ளி அருகே கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதால், இளைஞர்கள்,பள்ளி மாணவர்கள் எளிதில் மது பழக்கத்திற்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் சுமார் 12,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில், மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை,வங்கி, அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி,இரண்டு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இப்பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளும் உள்ளது. இந்த கடைகள் அரசு விதிகளின்படி பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வருகின்றன. கடைகள் உரிய நேரத்தில் மூடப்படுவதையும் போலீசார் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நேரத்தை பயன்படுத்தி பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் பின்புறம்,பேருந்து நிலையம் அருகே தண்டு மாநகர், ராள்ளபாடி,உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனி நபர்கள் கள்ள தனமாக குறைந்த விலை மது பாட்டில்களை வாங்கி கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் இதனை தடுக்க வேண்டிய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் குடியிருப்புகள், அரசு தொடக்க பள்ளி உள்ளது.

இங்கு இரவு 10 மணி முதல் மறுநாள் டாஸ்மாக் கடை திறக்கும் 12 மணி வரை கள்ளத்தனமாக மது பிரியர்களிடம் கமிஷன் கொடுத்து குறைந்த விலை மது பாட்டில்களை வாங்கி வர செய்து அவை வீட்டில் பதுக்கி வைத்து ரூபாய் 250, முதல் 350 வரை விலை நிர்ணயம் செய்து நேரத்திற்கேற்ப விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் ராள்ளபாடி அரசு தொடக்கப்பள்ளி அருகாமலே இருக்கின்ற இடத்திற்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையம் உள்ளது. இதனையும் பொருட்படுத்தாமல் மது விற்பனையும் அமோகமாக நடைபெறுவதாகவும், இந்த மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் நிலையத்தில் பலமுறை தகவல் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது.

சில நேரங்களில் மது அருந்தி விட்டு மது பிரியர்கள் பள்ளி நுழைவு வாயில் பகுதியில் விழுந்து கிடந்தும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும், மேலும் அவ்வழியாக செல்லும் பெண்களையும், மாணவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், இதனை பொதுமக்கள் தட்டி கேட்டால் அவர்கள் மீது தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதலுக்கு செல்வதாகவும், இந்த மது பாட்டில் விற்பனையால் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் எளிதில் மது பழக்கத்திற்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டு விடுமோ என? பெற்றோர்கள், பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் சமீப காலமாக பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும். இதனால் தாங்கள் பெண் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவும் அச்சப்படுவதாகவும்,
தற்போதாவது மக்கள் படும் இன்னலை கண்டு கொண்டு இதுபோன்று கள்ள சந்தையில் மது விற்பவர்களை அடையாளம் கண்டு போலீசார் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top