Close
ஜூன் 25, 2026 12:07 காலை

தென் மாநிலங்களில் வந்தே பாரத் ரயில்களுக்கு அதிகரிக்கும் வரவேற்பு

இந்திய ரயில்வேயின் நவீன அடையாளமாகவும், தொழில்நுட்ப மைல்கல்லாகவும் திகழும் ‘வந்தே பாரத்’ ரயில்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி வருவாயில் புதிய சாதனை படைத்து வருகின்றன. சொகுசு வசதிகள், அதிவேக பயணம் மற்றும் பாதுகாப்பான சூழல் காரணமாக, குறிப்பாக தென் மாநிலங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகளிடையே வரலாறு காணாத வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்திய ரயில்வேயின் பிரம்மாண்ட பின்னணி
உலக அளவில் நான்காவது பெரிய ரயில்வே வலையமைப்பைக் கொண்ட இந்திய ரயில்வே, சுமார் 68 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள ரயில் பாதைகளையும், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களையும் கொண்டு இயங்கி வருகிறது. கடந்த 1853-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ல் பம்பாய் – தானே இடையே தனது முதல் பயணத்தைத் தொடங்கிய இந்திய ரயில்வே, இன்று 13 லட்சம் ஊழியர்களுடன் உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகத் திகழ்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் அதிவேக மின்மயமாக்கல், கார்பன் உமிழ்வு குறைப்பு மற்றும் சரக்கு போக்குவரத்திற்கான பிரத்யேக வழித்தடங்கள் ஆகியவற்றின் மூலம் இந்திய ரயில்வே அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட Semi High Speed ரயிலான ‘வந்தே பாரத்’, கடந்த 2019 பிப்ரவரி 15 அன்று புது டெல்லி – வாரணாசி இடையே முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 82 வந்தே பாரத் ரயில்கள் 270 மாவட்டங்களை இணைத்து வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

பயணிகளின் எண்ணிக்கையில் சாதனை
அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, 2025-26 நிதியாண்டில் மட்டும் 3.98 கோடி பயணிகள் வந்தே பாரத் ரயில்களில் பயணித்துள்ளனர். தினமும் சராசரியாக 1.1 லட்சம் பேர் இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர். 2019 முதல் 2026 வரை 9.1 கோடிக்கும் அதிகமான பயணிகள் இதன் மூலம் பயனடைந்துள்ளதுடன், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணச் சுற்றுகளை (trips) இந்த ரயில்கள் நிறைவு செய்துள்ளன.

தெற்கு ரயில்வேயின் அசுர வளர்ச்சி (புள்ளிவிவரங்கள்)
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களை இணைக்கும் வந்தே பாரத் ரயில்களின் வருவாயும், பயணிகளின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் சீரான வளர்ச்சியை எட்டியுள்ளன. மங்களூரு – திருவனந்தபுரம், சென்னை – நாகர்கோவில் ஆகிய வழித்தடங்களில் தொடர்ந்து 100%-க்கும் அதிகமான இருக்கைகள் நிரம்பி வழிகின்றன.

தெற்கு ரயில்வேயின் ஒட்டுமொத்த வந்தே பாரத் செயல்பாடுகள் குறித்த ஒப்பீட்டு அட்டவணை:

அளவுகோல் நிதி ஆண்டு 2024-25 நிதி ஆண்டு 2025-26 ஏப்ரல் – மே 2025 ஏப்ரல் – மே 2026
மொத்த வருவாய் (கோடியில்) ரூ. 540.65 ரூ. 803.86 ரூ. 119.52 ரூ. 162.96
பயணம் செய்த மொத்த பயணிகள் (லட்சத்தில்) 52.12 77.38 11.41 15.21
நடப்பு முன்பதிவு செய்த பயணிகள் 2,98,989 7,42,428 61,990 1,39,817
நடப்பு முன்பதிவு வருவாய் (லட்சத்தில்) ரூ. 2,181.53 ரூ. 5,706.75 ரூ. 444.28 ரூ. 1,013.50

ரயில்களில் இருக்கை பயன்பாட்டை முழுமையாக்கவும், கடைசி நேரப் பயணிகளின் வசதிக்காகவும் தெற்கு ரயில்வே ‘நடப்பு முன்பதிவு’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியது. இதன்படி, ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை, தொடக்க நிலையம் மற்றும் வழியில் உள்ள அனைத்து நிலையங்களிலும் காலியாக உள்ள இருக்கைகளை பயணிகள் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

முதலில் சோதனை முறையில் 8 ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது தெற்கு ரயில்வேயின் அனைத்து 17 வந்தே பாரத் ரயில்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

திட்டத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய கால அளவுகோல் ஒப்பீடு:

அளவுகோல் ஏப். – ஜூன் 2025 ஆக. – அக். 2025 வளர்ச்சி (%)
சராசரி நடப்பு முன்பதிவு பயணிகள் 16,729 30,267 80.93%
இதன் மூலம் பெற்ற சராசரி வருவாய் ரூ. 124.80 லட்சம் ரூ. 222.17 லட்சம் 78.02%

இதுகுறித்து பெங்களூருவில் பணியாற்றும் ஐடி வல்லுநரும், ரயில் ஆர்வலருமான அருண்பாண்டியன் கூறுகையில்:

“விரைவான, சொகுசான பகல் நேரப் பயணத்திற்கு மக்கள் இப்போது வந்தே பாரத் ரயில்களையே முதன்மையாகத் தேர்வு செய்கிறார்கள். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள நடப்பு முன்பதிவு முறை அவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதம். சென்னையிலிருந்து மதுரைக்கு கால் டாக்ஸி எடுத்துச் செல்ல ஆகும் செலவில் கால் பங்குகூட வந்தே பாரத் கட்டணத்தில் இல்லை. இந்தியாவின் தற்சார்பு நிலைக்கு இந்த ரயில்களின் வளர்ச்சி ஒரு சிறந்த அடையாளம். ரயில்வே நிர்வாகம் இன்னும் கூடுதலான வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்கினால், பயணிகளின் வரவேற்பு இன்னும் அபரிமிதமாக இருக்கும்” என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top