தேனி பழனிசெட்டிபட்டியில் பாரத ஸ்டேட் வங்கி மதுரை மண்டலம் சார்பில் விவசாய வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வங்கியின் உதவிப் பொதுமேலாளர் சட்டநாதன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், எஸ்பிஐ வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள், சலுகைகள் மற்றும் நவீன விவசாய முறைகளைக் கையாளுவதால் ஏற்படும் பலன்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
இந்தக் கூட்டத்தில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் புதிய கடன் திட்டங்கள், மானியங்கள் மற்றும் வங்கியின் சேவை திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் வங்கி அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர்கள் பாலுமகிமைராஜ், ஷகீலா, ரஞ்சித்குமார் மவுரியா, டாக்டர் முத்துப்பாண்டியன் உட்பட வங்கி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கூட்டம் விவசாயிகளுக்குத் தேவையான நிதி உதவிகளைப் பெறவும், நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்தில் புகுத்தவும் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்தது எனப் பங்கேற்ற விவசாயிகள் தெரிவித்தனர்.




