Close
ஜூன் 26, 2026 2:59 காலை

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் கழிவுகளை எரிக்கக் கூடாது: கமிஷனர் எச்சரிக்கை

நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் குப்பை, கழிவுகளை எரிக்க கூடாது என ஆணையர் எச்சரிக்கை செய்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாநகராட்சி ஆணையர் சிவ பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கழிவுகளை பொது இடங்களில், எரிப்பதால் நுண்ணிய துகள்கள் உருவாகி அவை காற்றில் பரவி அதை சுவாசிக்கும் மனிதர்களின் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு, புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் உருவாகிறது. எனவே நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளில் மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 12 ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள், குப்பைகளை வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்கள் வசம் மக்கும், மக்காத, சிறப்பு, சுகாதார கழிவுகள் என 4 வகையாக பிரித்து வழங்க வேண்டும்.

பிரிக்கப்பட்ட மக்கும் கழிவுகள் நாமக்கல் மாநகராட்சியில் உள்ள 7 நுண்ணுரம் செயலாக்க மையங்களில் உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மக்கும் கழிவுகளில் இருந்து தயார் செய்யப்படும் உரம் தேவைப்படுவோர், மாநகராட்சி அலுவலகத்தில் பொது சுகாதார பிரிவில் நேரடியாக அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

மக்காத கழிவுகள் தினசரி சுமார் 12,000 கிலோ அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு எரிபொருள் பயன் பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே பொது மக்கள் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் ரோடு, சேந்தமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு உள்ளிட்ட பொது இடங்களில் குப்பைகளை கொட்டக் கூடாது.

பிரிக்கப்பட்ட மக்காத கழிவுகள் கொசவம்பட்டியில் உள்ள பொருட்கள் சேகரிப்பு மையத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் கழிவுகளை எரிக்காமல், பொது இடங்களில், சாக்கடைகளில் கொட்டாமல் தூய்மை பணியாளர்கள் வசம் நேரடியாக ஒப்படைத்து, நாமக்கல் மாநகராட்சி தூய்மையான நகரம் என தொடர்ந்து விளங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top