Close
ஜூன் 26, 2026 1:34 காலை

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆணையர் கௌரவ் குமார் ஆய்வு

மதுரை மாநகராட்சி அரசு இராஜாஜி மருத்துவமனை பகுதிகள், பனகல் சாலை மெயின் ரோடு, ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் டி.டி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை வசதி மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து ஆணையாளர் கௌரவ் குமார்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.30 பனகல் சாலை மெயின் ரோடு, அரசு இராஜாஜி மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகள், வைகை வடகரை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு குப்பைகளை சாலைகளில் வீசாமல் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் கொட்டுமாறு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறினார். மேலும், அப்பகுதியில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.57 ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை வசதி மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பேருந்து நிலையத்தில் உள்ள கடைக்காரர்களிடம் தங்கள் கடைகளில் சேரும் குப்பைகளை சாலைகளில் கொட்டாமல் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் கொட்டுமாறும், கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழி மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என, கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்.
அங்குள்ள பொது கழிப்பறைகள் மற்றும் பேருந்து நிலைய வளாக பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தொடர்ந்து பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறினார். மேலும் ஆரப்பாளையம் டி.டி.ரோடு பகுதியில் உள்ள வீடுகளில் சேரும் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என, தரம் பிரித்து வழங்குமாறும், அப்பகுதிகளில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என அப்பகுதியில் குடியிருப்பவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், மாநகராட்சி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top