நாமக்கல் மாவட்டத்தில் வருகிற ஜூலை 1ம் தேதி முதல், 2,80,600 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 9-வது சுற்று கோமாரிநோய், தடுப்பூசிப் பணி வருகிற ஜூலை 1ம் தேதி தொடங்கி, தொடர்ச்சியாக 41 நாட்கள் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,80,600 கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி போடப்பட உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் அந்தந்தப் பகுதி கால்நடை மருந்தகங்களில், கால்நடை உதவி மருத்துவர்களால் குறிப்பிடப்படும் தேதியில், குறிப்பிட்ட இடங்களுக்கு தங்கள் கால்நடைகளை கொண்டு சென்று, கோமாரி நோய் தடுப்பூசிபோட கேட்டுக்கொள்ளலாம்.
இத்தடுப்பூசிப் பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்டு 105 தடுப்பூசி பணி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து குக்கிராமங்களுக்கும் குழுவினர் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது பசு, எருமை, எருது, மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், ஆகிய கால்நடைகளை அழைத்துச் சென்று, ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிடப்பட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் தங்களது கால்நடைகளுக்கு தவறாது கோமாரி நோய் தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.




