ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் எழுதுவதோ அல்லது பேசுவதோ சமூகத்திற்குச் செய்யும் மிகப்பெரிய கேடாகும். ஒரு செய்தியை உடனே கொடுத்தே ஆக வேண்டும்” என்ற அவசரத்திலோ அல்லது நிர்ப்பந்தத்திலோ தவறான, அரைகுறை தகவல்களைச் சொல்லிவிடக் கூடாது. சற்றே கூடுதல் முயற்சி எடுத்து, முழு உண்மைகளையும் ஆராயாமல் அவசரத்தில் எந்தவொரு கருத்தையும் திணிக்கக் கூடாது.
சுருக்கமாகச் சொன்னால், முழுமையாகத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றிப் பக்கம்பக்கமாக எழுதுவதையும் பேசுவதையும் விட, அமைதியாக இருந்துவிடுவது எவ்வளவோ மேலானது.
இதை நாம் இப்போது வலியுறுத்திக் கூற மிக முக்கியமான காரணம் இருக்கிறது. சமீப ஆண்டுகளாகத் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஒரு புதிய நோய் வேகமாகப் பரவி வருகிறது. அதுதான் கருத்து கந்தசாமிகள் மற்றும் அரைகுறை மேதாவிகளின் குழப்பம் நிறைந்த கருத்துக்கள்!
இத்தகைய நபர்களுக்கு எந்தவொரு துறையிலும் ஆழமான அல்லது முழுமையான அறிவு இருப்பதில்லை. தாங்கள் பேசும் சப்ஜெக்ட்பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும் மாட்டார்கள். ஆனால், பலர் முன்னிலையில் தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும், பலரின் கவனம் தங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்ற ஒரே சுயநலத்திற்காக எதையாவது பேசி, தானும் குழம்பி, சமூகத்தையும் குழப்பி விடுகிறார்கள். இவர்களின் இத்தகைய செயல்பாடுகள்தான் பல சமூகச் சீர்கேடுகளுக்கு அடித்தளமாக அமைகின்றன.
“குட் டச், பேட் டச்” – எங்கு தொடங்கியது குழப்பம்?
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை நாம் இங்கு நினைவுகூர வேண்டும். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் சற்று அதிகமாக இருந்த காலகட்டம் அது. தமிழகம் முழுவதும் குழந்தைகளைப் பாதுகாக்கப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்பொழுதுதான் ‘குட் டச், பேட் டச்’ என்ற வாசகம் பெரிய அளவில் பிரபலமடைந்தது.
ஒரு முன்னணிப் பள்ளியில் சில ‘கருத்து கந்தசாமிகள்’ கூடி, குழந்தைகளுக்கு ‘குட் டச்’ என்றால் என்ன, ‘பேட் டச்’ என்றால் என்ன என்று விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அங்கு சொன்ன விஷயம் அனைவரையும் பதற வைப்பதாக இருந்தது:
அவர்கள், “குட் டச்” தவறில்லை என்று குழந்தைகளுக்கு விளக்கம் தந்தனர். ஒரு பெண் குழந்தையை அவரது தாய், தந்தை (குறிப்பிட்ட வயது வரை மட்டும்) தொட்டுத் தூக்கிப் பேசலாம்; பள்ளி ஆசிரியை தொட்டுப் பேசலாம்; இதில் தவறில்லை என்றனர்.
மேலும், “நல்ல முறையில் தொடுவதில் தவறு இல்லை” என்று கூறி, மூன்றாம் நபர் யாராவது பெண் குழந்தையைத் தொடுவதை மறைமுகமாக அனுமதிக்கும் விதமாகப் பேசினர்.
உண்மை என்னவென்றால், நல்ல முறையில் தொட்டுக் கொள்ளலாம் என்று கூறி, தேவையில்லாத எந்தவொரு மூன்றாம் நபருக்கும் குழந்தைகளையோ, பெண்களையோ தொட நாம் ஒருபோதும் அனுமதியளிக்கக் கூடாது! குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தர வேண்டியது ‘குட் டச்’ அல்ல… “டோன்ட் டச்” மட்டும்தான்!
இந்த விவகாரம் பல விவாதங்களைக் கடந்து, இறுதியில் உச்சநீதிமன்றம் வரை வழக்காகச் சென்றது. இந்த விவகாரத்தை ஆராய்ந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இது சம்பந்தப்பட்ட வழக்குகளில் இரண்டு முறை மிகத் தெளிவான தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.
இரு முறையும் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு இதுதான்: குழந்தைகள் விஷயத்தில் ‘குட் டச், பேட் டச்’ என்ற பேச்சுகளுக்கே இடமில்லை. ‘டோன்ட் டச்’ என்பது மட்டும்தான் சரி!”
இவ்வளவு தெளிவான தீர்ப்பிற்குப் பிறகும், நம் ஊர் அரைகுறை மேதாவிகள் இந்த கருத்தை ஏற்பதாக இல்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகளை விடத் தாங்கள் தான் அறிவில் சிறந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டு இன்னும் அதே பழைய பல்லவியைப் பாடி வருகிறார்கள்.
இப்போது இவ்வளவு பெரிய கதையை நாம் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. சமீபத்தில் மேலூரில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மரத்தான் ஓட்டப்பந்தயம் ஒன்று நடைபெற்றது. அதில் ஓடிய சில மாணவிகள் திடீரென மயங்கி விழுந்தனர். அப்போது அங்கு வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் உட்படப் பலர் அந்த குழந்தைகளுக்கு முதலுதவி செய்தனர்.
இதைப்பயன்படுத்தி அரசியல் செய்ய நினைத்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர், தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் ஒரு மாணவியின் காலைத் தொடுவது போன்ற ஒரு புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு, கண்டனக் கருத்துக்களைப் பதிவிட்டார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய கருத்துப் போராக வெடித்துள்ளது.
நாம் இந்த அரசியல் சேற்றுக்குள் நுழைய விரும்பவில்லை. ஆனால், இந்த ஒட்டுமொத்த குழப்பத்திற்கும் அடிப்படைப் புள்ளியாக இருப்பது அதே ‘குட் டச், பேட் டச்’ என்ற அரைகுறைக் கோட்பாடுதான்.
நாம் ஆரம்பத்திலிருந்தே பெண் குழந்தைகளுக்கு “டோன்ட் டச்” என்று சொல்லி கொடுத்து, இந்த சமூகத்தையும் அதற்கேற்பப் பழக்கியிருந்தால், இன்று இப்படி ஒரு குழப்பமே வந்திருக்காது. இந்த “டோன்ட் டச்” என்ற விழிப்புணர்வை நாம் சமூகத்தில் ஆழமாக விதைத்திருந்தால், அந்த அமைச்சர் நிச்சயம் அந்த மாணவியைத் தொட்டிருக்கவே மாட்டார்.
அதுமட்டுமின்றி, மாணவிகள் பங்கேற்கும் ஒரு மரத்தான் போட்டியில் பாதுகாப்பு மற்றும் முதலுதவி ஏற்பாடுகளுக்காகப் புத்திசாலித்தனமாகப் பல பெண் ஆசிரியைகள், பெண் செவிலியர்கள் மற்றும் பெண் மருத்துவர்களை மட்டுமே நிர்வாகம் களமிறக்கியிருக்கும்.
குறிப்பாக, திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டு காலகட்டத்தில் இந்த ‘குட் டச், பேட் டச்’ அல்லது குழந்தைகள் பாதுகாப்புப் பற்றிக்கூடப் பெரிதாகப் பேசவில்லை; தங்களுக்குத் தோன்றிய போக்கில்தான் ஆட்சியை நடத்தினர். ஆட்சியில் இருப்பவர்கள், உச்சநீதிமன்றம் குழந்தைகள் பாதுகாப்புப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்பதைத் தெளிவாக அறிந்து, அது தொடர்பான சட்ட விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு போய் முழுமையாகச் சேர்த்திருக்க வேண்டும். அதில் அரசு தவறிவிட்டது.
மறுபுறம், தாங்கள் பதவியில் இருந்த காலத்தில் இது குறித்து எந்தவொரு உருப்படியான நடவடிக்கையையும் எடுக்காமல், இப்போது வெறும் ‘அட்டன்டென்ஸ்’ போடுவதற்காக எதிர்க்கட்சிகள் இப்படிப்பட்ட விஷயங்களில் அரசியல் செய்யக் கூடாது.
நிச்சயமான ஒரு உண்மை என்னவென்றால், “பெண் குழந்தைகளையும், பெண்களையும் ஆண்கள் யாரும் எக்காரணம் கொண்டும் தொடக் கூடாது” என்பதைச் சமூகத்தில் அழுத்தமாகப் பதிய வைத்திருந்தால், நம் நாட்டு மாணவிகளுக்கும் குழந்தைகளுக்கும் 100% பாதுகாப்பு கிடைத்திருக்கும்; தேவையற்ற அரசியல் குழப்பங்களும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துகிறோம்:
- பெற்ற தாய், தந்தை சில வருடங்கள் வரை (குறிப்பிட்ட வயது வரை) குழந்தையைத் தொடலாம்.
- உடன் பிறந்த தங்கைகள், அக்காக்கள் மற்றும் இதர பெண்கள் ஒரு பெண்ணைத் தொட்டுப் பேசுவதோ, முதலுதவி செய்வதோ தவறில்லை.
- அவசரக் கால முதலுதவி என்று வரும்போது, பாதிக்கப்பட்டவரின் சூழலுக்கு ஏற்ப, அவர்களுக்கு எந்தவொரு சங்கடமும் தராத வகையில் மனிதநேயத்துடன் உதவி செய்யலாம்; அதுவும் தவறில்லை.
ஆனால், “குட் டச்” என்ற பெயரில் நல்ல முறையில் குழந்தைகளையும் பெண்களையும் ஆண்கள் தொடலாம் என்று பொருள்படும் வாதத்தை நாம் 100% தடுத்து நிறுத்த வேண்டும். ஆண்கள் என்றால் குழந்தைகளை “டோன்ட் டச்” என்பது மட்டும்தான் விதி என்பதைத் தீர்க்கமான மனதுடன் அனைவரும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை மதித்தாவது, இந்த கருத்து கந்தசாமிகளும் அரைகுறை மேதாவிகளும் இனிமேல் “டோன்ட் டச்” என்ற சரியான விதியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்!




