ஸ்மார்ட்போன் சந்தை தற்போது ஒரு புதிய மற்றும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதற்கு மொபைல் நிறுவனங்களின் தவறான திட்டமிடல் காரணமல்ல; மாறாக உலகை ஆட்டிப்படைத்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும், அதன் பின்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ, கூகுள், அமேசான், ஆந்த்ரோபிக் போன்ற நிறுவனங்களே காரணம்.
ஆம், ஸ்மார்ட்போன்களுக்குத் தேவைப்படும் ரேம் (RAM – Random Access Memory) மற்றும் ஸ்டோரேஜ் பாகங்களை இந்த ஏஐ நிறுவனங்கள் தங்களின் டேட்டா மையங்களுக்காக ஒட்டுமொத்தமாக அள்ளிச் செல்வதுதான் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம்.
நத்திங் நிறுவனத்தின் இணை நிறுவனரும், இந்தியப் பிரிவின் தலைவருமான அகிஸ் எவஞ்சலிடிஸ் இது குறித்துக் கூறும்போது, சென்ற ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடுகையில் தற்போது ரேம் நினைவகத்தின் விலை சுமார் 8 மடங்கு வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்க ஆகும் மொத்த செலவில், முன்பு ரேம் நினைவகத்திற்கு மட்டும் 20 டாலர்கள் செலவானது. ஆனால், இன்று அது 100 முதல் 130 டாலர்கள் வரை உயர்ந்துவிட்டது. அதாவது, ஒரு போனை உருவாக்க ஆகும் செலவில் 30% முதல் 35% வரை ரேமிற்கே செலவிட வேண்டியுள்ளது.” எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தத் திடீர் விலை மாற்றத்தால், ரூ.25,000-க்கு கீழ் ஒரு சிறந்த ஸ்மார்ட்போனை நுகர்வோருக்குத் திருப்திகரமான அம்சங்களுடன் வழங்குவது தற்போதைய பொருளாதாரச் சூழலில் சாத்தியமில்லாமல் போய்விட்டது.
ஏஐ அலையால் ஸ்மார்ட்போன்களுக்கு வந்த பற்றாக்குறை
கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் அமைப்பின் தருண் பதக் இதுபற்றிக் கூறும்போது, என்விடியா, கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்களின் அதிநவீன ஏஐ சிப்களுக்காகச் சந்தையில் இருக்கும் உயர்தர ரேம்களை அதிகளவில் கொள்முதல் செய்கின்றன. இதனால், சிப் தயாரிப்பாளர்கள் தங்களின் கவனத்தை ஏஐ சர்வர்கள் பக்கம் திருப்பியுள்ளனர். இதன் விளைவாக, ஸ்மார்ட்போன்களுக்கான நினைவகப் பங்கீடு வெகுவாகக் குறைந்து, அதன் விலை 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தை 11 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என்றும் அவர் கணித்துள்ளார்.
வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் ‘பாகங்களின் குறைப்பு’
விலை உயர்வு நுகர்வோரை நேரடியாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. முன்பு ரூ.20,000-க்கு கீழ் தாராளமாகக் கிடைத்த பிரீமியம் அம்சங்கள் (டிஸ்ப்ளே, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், அதிவேக பிராசஸர்கள்) இப்போது ரூ.30,000 பட்ஜெட் போன்களுக்கு நகர்ந்துவிட்டன. தற்போது ரூ.20,000 பட்ஜெட்டில் வரும் போன்களில் எல்சிடி பேனல்கள், சிங்கிள் ஸ்பீக்கர், பேசிக் கேமராக்கள் போன்ற சமரசங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
மேலும், ஸ்மார்ட்போன்களில் ரேம் அளவை அதிகரிக்கும் போக்கு மாறி, தற்போது குறைக்கும் போக்கு தொடங்கியுள்ளது. முன்பு 12 ஜிபி ரேமுடன் வந்த பல போன்கள், இப்போது அதே விலையில் 8 ஜிபி ரேமுடன் மட்டுமே சந்தைக்கு வருகின்றன. நத்திங், ஒன்பிளஸ், ரியல்மி மற்றும் சியோமி போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் பழைய மாடல்களின் விலையைக் கூட உயர்த்தியுள்ளன.
இந்த ரேம் விலை உயர்வு பட்ஜெட் போன்களை மட்டுமல்லாமல், உலகின் முன்னணி பிரீமியம் பிராண்டான ஆப்பிள் நிறுவனத்தையும் உலுக்கியுள்ளது. ஆப்பிள் தலைமை நிர்வாகி டிம் குக் அண்மையில் அளித்த பேட்டியில், “நாங்கள் இதுவரை இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அளவிற்குப் பாகங்களின் விலை உயர்ந்ததைக் கண்டதில்லை. வாடிக்கையாளர்களைப் பாதிக்கக் கூடாது என்று இதுவரை விலையைத் தாங்கிக்கொண்டோம், ஆனால் தற்போதைய நிலை நீடிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார். இதனால் ஐபேட் மற்றும் மேக் சாதனங்களின் விலையை ஆப்பிள் உயர்த்தத் தொடங்கியுள்ளது.
இந்த ரேம் பற்றாக்குறை மற்றும் விநியோகச் சங்கிலிப் பிரச்னைகள் அவ்வளவு சீக்கிரம் சரியாகாது. படிப்படியான முன்னேற்றத்தைக் காணவே 2028 ஆம் ஆண்டு வரை ஆகலாம். சுருக்கமாகச் சொன்னால், குறைவான விலையில் சிறந்த போன்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த 2026ம் ஆண்டு சற்று ஏமாற்றமளிக்கும் ஆண்டாகவே இருக்கப்போகிறது.




