Close
ஜூன் 27, 2026 12:32 காலை

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை

முன்னாள் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான திருவண்ணாமலையை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரண் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக் கல்லூரி, ஜீவா வேலு இன்டர்நேஷனல் மெட்ரிக். பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வியாழக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் ஏழு குழுக்களாக 35 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட 11 பேர் மீது தமிழ்நாடு ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தண்டராம்பட்டு தொகுதியில் 3 முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும், திருவண்ணாமலை தொகுதியில் 4 முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் வெற்றி பெற்று 7 முறை சட்டப் பேரவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

மேலும், கரூர் மாவட்டத்தின் முக்கிய புள்ளியாக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான சங்கர் ஆனந்த் வீட்டில் இன்று காலை 8 மணி அளவில், இரண்டு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 10 பேர் திடீர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் ஒப்பந்ததாரர் கார்த்தி வீடு, பள்ளப்பட்டியில் உள்ள ரஃபீக் என்பவரது வீடு என கரூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கடந்த 2022ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரில், மாநில நெடுஞ்சாலை துறையின் திட்டத்தின் கீழ் கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சில சாலை பணிகளில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.

அப்பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், முடிந்ததாக போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்த நிறுவனத்திற்கு அரசு பணம் வழங்கப்பட்டதாகவும், பின்னர் ஆதாரங்களை மறைக்கும் வகையில் அவசர அவசரமாக சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

11 பேருக்கு எதிராக வழக்கு

இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விரிவான விசாரணை நடத்தினர். அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்றதைத் தொடர்ந்து நேற்று முன்னாள் அமைச்சர் உட்பட 11 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புதுறையில் வழக்கு பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரும், தற்போது திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் பட்டியலில் ஏ1 ஆக சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் நெடுஞ்சாலை துறையைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய உதவி கோட்ட பொறியாளர், இளநிலை பொறியாளர், சாலை பராமரிப்பு பிரிவின் கோட்ட கணக்காளர், கோட்ட பொறியாளர், சூப்ரெண்டிங் பொறியாளர், உதவி பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் ஆகிய பதவிகள் வகித்த அதிகாரிகளும் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் வேலு கூறுகையில்,

நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் பரிசுத்தமானவன், தவறும் செய்யாதவன். பொய்யை திரும்பத் திரும்ப சொல்வதால் உண்மை ஆகி விடாது. நான் நீதிமன்றத்திற்கு சென்று நிரபராதி என்று நிரூபிப்பேன் என கூறினார்.

தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று 40 நாட்கள் கடந்து உள்ள நிலையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும்போது, இந்த வழக்குக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும் அதன் மூலம் வழக்கு விசாரணையை நியாயமான முறையில் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top