உலகளாவிய ஆராய்ச்சித் துறையில் இந்தியா ஒரு பெரும் சக்தியாக வளர்ந்து வருகிறது என்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், கல்வி உலகை உலுக்கும் ஒரு அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகியுள்ளது. 2025-ஆம் ஆண்டில், சர்வதேச அளவில் போலி அல்லது தவறான காரணங்களுக்காக ஆய்வறிக்கைகள் திரும்பப் பெறப்பட்டதில் உலகின் டாப் 10 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 6 இடங்களை இந்தியப் பல்கலைக்கழகங்கள் பிடித்துள்ளன.
‘ரிட்ராக்ஷன் வாட்ச்’ தரவுத்தளத்தின் அடிப்படையில் ‘இந்தியா டுடே’ வெளியிட்டுள்ள இந்தத் தகவல், இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையின் நம்பகத்தன்மை மீதான விவாதங்களை எழுப்பியுள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா!
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தத் பட்டியலில் சீனாவின் பல்கலைக்கழகங்களே ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால், தற்போது அந்த இடத்தை நோக்கி இந்தியா வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. 2025 தரவுகளின்படி, உலகளவில் ஆய்வறிக்கைகளைத் திரும்பப் பெற்ற நாடுகளில் சீனா (1,701) முதலிடத்திலும், இந்தியா (887) இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் ஈராக் 429, அதனைத் தொடர்ந்து ரஷ்யா (363), சவுதி அரேபியா (343) மற்றும் அமெரிக்கா (277) ஆகிய நாடுகள் உள்ளன.
இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், உலகளாவிய மொத்த ஆராய்ச்சிகளில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் 5 சதவீதம் தான். ஆனால், உலகளவில் திரும்பப் பெறப்படும் ஆய்வறிக்கைகளில் இந்தியாவின் பங்கு 21 சதவீதமாக உள்ளது.
டாப் 10 பட்டியலில் உள்ள பல்கலைக்கழகங்கள்:
சர்வதேச அளவில் 2025-ல் அதிக ஆய்வறிக்கைகளைத் திரும்பப் பெற்ற டாப் 10 பல்கலைக்கழகங்களின் பட்டியல் இதோ:
- அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) இந்தியா, 161 ஆய்வறிக்கைகள்
- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், இந்தியா, 160 ஆய்வறிக்கைகள்
- சவீதா இன்ஸ்டிடியூட் (SIMATS) இந்தியா, 159 ஆய்வறிக்கைகள்
- கிங் சவுத் பல்கலைக்கழகம், சவுதி அரேபியா, 116 ஆய்வறிக்கைகள்
- ஜே.என்.டி.யு (ஹைதராபாத்) இந்தியா, 104 ஆய்வறிக்கைகள்
- லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டி, இந்தியா, 98 ஆய்வறிக்கைகள்
- விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இந்தியா, 76 ஆய்வறிக்கைகள்
- அல்கஃபீல் பல்கலைக்கழகம், ஈராக் 71 ஆய்வறிக்கைகள்
- டான் ஸ்டேட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ரஷ்யா 70 ஆய்வறிக்கைகள்
- குஃபா பல்கலைக்கழகம், ஈராக் 62 ஆய்வறிக்கைகள்
இவர்களைத் தவிர வி.ஐ.டி வேலூர் (48), எஸ்.ஆர்.எம் (38), ஜி.எல்.ஏ பல்கலைக்கழகம் (38) ஆகியவையும் டாப் 19 பட்டியலுக்குள் வருகின்றன
ஆய்வறிக்கைகள் திரும்பப் பெறப்பட என்ன காரணம்?
ஏதோ தற்செயலாக நடந்த தவறுகளால் இவை திரும்பப் பெறப்படவில்லை என்பதை ‘இந்தியா ரிசர்ச் வாட்ச்’ பகிர்ந்த தரவுகள் காட்டுகின்றன:
- போலியான பியர் ரிவ்யூ : தங்களுக்குத் தெரிந்தவர்களைக் கொண்டே ஆய்வறிக்கையைச் சரிபார்க்க வைப்பது.
- ஏஐ மற்றும் கணினியால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம்: ஆய்வாளர்கள் சுயமாக உழைக்காமல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டுரைகளைத் தயாரிப்பது.
- பேப்பர் மில்கள்: பணத்தைப் பெற்றுக்கொண்டு போலி ஆய்வறிக்கைகளைத் தயாரித்துத் தரும் நிறுவனங்களை நாடுவது.
- டேட்டா கையாளுதல் : தவறான முடிவுகள் மற்றும் போலியான வரைபடங்களை உருவாக்குவது.
சிஸ்டத்தின் தவறு எங்கே?
கல்வித் துறையில் இன்று நிலவும் “கட்டுரைகளை பிரசுரி, இல்லையென்றால் காணாமல் போ” என்ற கட்டாயமே பேராசிரியர்களையும், மாணவர்களையும் தவறான வழிக்குத் தூண்டுகிறது.
இந்தியாவின் என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசைப் பட்டியலிலும், பல்கலைக்கழகங்களின் பதவி உயர்வுகளிலும் யார் அதிக கட்டுரைகளை வெளியிடுகிறார்கள், யாருக்கு அதிக சைட்டேஷன்கள் கிடைக்கின்றன என்பதற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. தரத்தை விட எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த முறையினால், குறிப்பாக சில தனியார் பல்கலைக்கழகங்கள் அசுர வேகத்தில் கட்டுரைகளை வெளியிட்டுத் தரவரிசையில் முன்னேறின. ஆனால், அதன் பின்னணியில் உள்ள முறைகேடுகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆய்வுக் கட்டுரைகள் திரும்பப் பெறப்பட்ட முக்கியத் துறைகள்
- தொழில்நுட்பம் 11.24%
- டேட்டா சயின்ஸ் 10.67%
- கணினி அறிவியல் 9.53%
- மெடீரியல் சயின்ஸ் 5.05%
- நியூராலஜி நரம்பியல் 4.98%
- பயோகெமிஸ்ட்ரி 3.80%
- சர்ஜரி 3.38%
- நானோ தொழில்நுட்பம் 3.27%
- சுற்றுச்சூழல் ஆராய்ச்சி 2.89%
- மின் பொறியியல் 2.39%
சீனாவிடம் இருந்து இந்தியா கற்க வேண்டிய பாடம்
இதே போன்ற ஒரு மோசடிப் பாதையை சீனா சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்கொண்டது. 2021 முதல் 2024 வரை சீனப் பேராசிரியர்களின் 17,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் திரும்பப் பெறப்பட்டன. ஆனால், சீனா உடனடியாகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தது.
தவறு செய்தவர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது, பதவி இறக்கம் செய்யப்பட்டனர் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் ஆராய்ச்சி நிதிகள் தடை செய்யப்பட்டன. இதனால் அங்குத் தவறுகள் குறையத் தொடங்கின. இந்தியாவிலும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தேவை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
நெருக்கடியான நிதி ஆதாரங்களுக்கு மத்தியிலும் (இந்தியா தனது ஜிடிபியில் வெறும் 0.65 சதவீதத்தை மட்டுமே ஆராய்ச்சிக்குச் செலவிடுகிறது) இந்திய அறிவியல் உலகம் பல சாதனைகளைப் படைத்து வருகிறது.
ஆனால், ஒரு சில பல்கலைக்கழகங்களின் இத்தகைய குறுகிய கால தரவரிசை ஆசை, சர்வதேச அரங்கில் ஒட்டுமொத்த இந்திய அறிவியலின் நம்பகத்தன்மையையும், சர்வதேச கூட்டு ஆராய்ச்சிகளுக்கான வாய்ப்புகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எண்ணிக்கையைத் துரத்துவதை நிறுத்திவிட்டு, தரமான அறிவியலை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.




