தமிழகத்தில் நிலவும் கடும் வெப்பத்தால், கோழிப்பண்ணைகளில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி முட்டை உற்பத்தி சரிவடைந்துள்ளதாக என்இசிசி தலைவர் தெரிவித்தார்.
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) சார்பில், கோழிப்பண்ணையாளர்கள் சந்திப்பு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. என்இசிசி மண்டல தலைவரும், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவருமான சிங்கராஜ் நிகழ்சிக்கு தலைமை வகித்துப் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டையினக் கோழிகள் 1,000க்கும் மேற்பட்ட பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. 2 மாதங்கள் முன்பு நாள் ஒன்றுக்கு சுமார் 8 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டன.
தற்போது நிலவி வரும் கடும் வெப்பத்தால், கோழிகளில் தீவன எடுப்பு குறைந்து, முட்டை உற்பத்தி சுமார் 15 சதவீதம் சரிந்துள்ளது. இதனால், தற்போது நாள் ஒன்றுக்கு 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பல இடங்களில் தண்ணீர் வறண்ட நிலையில் பல பண்ணையாளர்கள் கோழிகளுக்கு தேவையான தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் கோழித்தீவினற்கு தேவையான மக்காசோளம், சோயாபுண்ணாக்கு, தவிடு போன்ற மூலப்பொருட்களின் விலை கடந்த ஒரு மாதத்தில், ஒரு டன்னுக்கு ரூ.10 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
இதனால் தீவன விலை உயர்ந்து, முட்டையின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. மேலும் பண்ணை பராமரிப்பு செலவும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 6.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டை ரூ. 7க்கு விற்பனை செய்தால்தான் பண்ணைகளை லாபகரமாக நடத்த முடியும்.
மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உணவுக்கழக (எப்சிஐ) குடோன்களில், உணவுக்குப்பயன்படாத சோளம், கம்பு, கோதுமை உள்ளிட்ட மூலப்பொருட்கள் ஆயிரக்கணக்கான டன் வீனாகி வருகிறது. அவற்றை கோழி மற்றும் கால்நடை தீவனத்திற்காக, பண்ணையாளர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கடும் வறட்சி ஏற்பட்டபோது மத்திய அரசால் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆனி, ஆடி மாதங்களில் ஈ தொல்லை தமிழகத்தில் அதிகரிக்கும், கோழிப்பண்ணைகளில் ஈக்கள் பரவாமல் தடுப்பதற்காக, பண்ணை பகுதிகளை ஈரமற்ற பகுதியாக பராமரித்து வருகிறோம். புதிய பண்ணை அமைப்பவர்கள் மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளை பின்பற்றி பண்ணை அமைத்தால் அனுமதி பெறுவதற்கு எளிதாக இருக்கும் என்று கூறினார்.
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜன், பொருளாளர் இளங்கோ, முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் வல்சன், என்இசிசி வட்டார தலைவர்கள் ராஜேந்திரன், பாலுசாமி, ஆனந்தன், பிரபு, தங்கமுத்து உள்ளிட்ட திரளான பண்ணையாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.




