இன்று இந்தியாவில் டீக்கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்திலும் ‘ஜிபே’ , ‘ஃபோன்பே’ அல்லது ‘பேடிஎம்’ போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்துவது நமது அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது.
யுபிஐ பரிவர்த்தனை முற்றிலும் இலவசம் என்ற பொதுவான கருத்து நம்மிடையே நிலவுகிறது.ஆனால், உண்மையில் ஒரு நாளைக்கு நடக்கும் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகளின் பின்னணியில் இருக்கும் கணக்கையும், ஒரு சராசரி மனிதன் இந்த டிஜிட்டல் சேவைக்காக மறைமுகமாகச் செய்யும் செலவுகளையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
ஒரு நாளைக்கு 75 கோடி பரிவர்த்தனைகள்
இந்தியாவில் தற்போது ஒரு நாளைக்குச் சராசரியாக 75 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. ஒருவேளை, இந்த அசாத்தியமான டிஜிட்டல் கட்டமைப்பைப் பராமரிக்கவும் சேவைக்காகவும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் மிகக் குறைந்த தொகையாக வெறும் 5 பைசா வசூலிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். கணக்கு எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்:
ஒரு நாளுக்கான கட்டணம்: 75,00,00,000 X 0.05 ரூபாய் = 3.75 கோடி ரூபாய். ஒரு வருடத்திற்கான கட்டணம் 3.75 கோடி X 365 நாட்கள் = 1368.75 கோடி ரூபாய்
வெறும் 5 பைசா என்ற மிகச்சிறிய தொகை, இந்தியாவின் மக்கள் தொகையினாலும் டிஜிட்டல் பயன்பாட்டினாலும் ஒரு வருடத்திற்குச் சுமார் 1381 கோடி ரூபாய் என்ற பிரம்மாண்ட தொகையாக உருவெடுக்கிறது!
இந்த 1381 கோடி ரூபாய் எங்கே போகிறது?
யுபிஐ இலவசம் தானே, பிறகு ஏன் இந்தக் கணக்கு? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். தற்போது பயனர்களுக்கு இது நேரடி கட்டணமாக விதிக்கப்படாவிட்டாலும், இவ்வளவு பெரிய டிஜிட்டல் கட்டமைப்பை இயக்குவதற்குப் பின்வரும் வழிகளில் நிதி பயன்படுத்தப்படுகிறது அல்லது செலவிடப்படுகிறது
மத்திய அரசு மற்றும் வங்கிகள் இந்த டிஜிட்டல் புரட்சியை ஊக்குவிக்கப் பெருமளவில் மானியங்களை வழங்குகின்றன.கட்டமைப்பு மற்றும் சர்வர் பராமரிப்பு: நொடிக்கு ஆயிரக்கணக்கான பரிவர்த்தனைகளைத் தங்குதடையின்றிச் செயல்படுத்த அசுர வேக சர்வர்கள் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்பு தேவைப்படுகிறது.
இதற்கான பராமரிப்புச் செலவு மிக அதிகம். வங்கிச் செயலாக்கக் கட்டணங்கள் ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் அனுப்பும் வங்கி மற்றும் பெறும் வங்கி என இரு தரப்பு சர்வர்களும் வேலை செய்ய வேண்டும். இதற்கான மறைமுகச் செலவுகள் வங்கிகளால் ஏற்கப்படுகின்றன.
மக்களின் பணம் பாதுகாப்பாகப் போய் சேர ஹேக்கிங் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மென்பொருட்களுக்குக் கணிசமான தொகை செலவிடப்படுகிறது.
‘இலவசம்’ என்பது நிஜம்தானா?
யுபிஐ பரிவர்த்தனைக்கு நாம் நேரடியாகக் கட்டணம் செலுத்துவதில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்த யுபிஐ-ஐ பயன்படுத்துவதற்காக நாம் வாங்கும் மொபைல் மற்றும் ரீசார்ஜ் பேக்குகளைக் கணக்கிட்டால், நாம் தினமும் கணிசமான தொகையைச் செலவிடுகிறோம் என்பது புரியும்.
ஒரு சாதாரண ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10,000 என்று வைத்துக்கொள்வோம். அதனை நீங்கள் 5 ஆண்டுகள் பயன்படுத்துகிறீர்கள் எனில் ஒரு வருடத்திற்கான மதிப்பு: ரூ. 2000. ஒரு நாளுக்கான மதிப்பு: தோராயமாக ரூ. 5.50.
இன்டர்நெட் சேவைக்கான செலவு யுபிஐ பயன்படுத்த இன்டர்நெட் வசதி மிக அவசியம். ஒரு மாத ரீசார்ஜ் பேக் தோராயமாக ரூ. 300 எனில்:ஒரு நாளுக்கான இணையச் செலவு: ரூ.10.00.
ஒரு நாளுக்கான மறைமுகச் செலவு, மொபைல் ஃபோன் தேய்மான மதிப்பு ரூ. 5.50 மொபைல் ரீசார்ஜ் / இணையச் செலவுரூ. 10.00. மொத்த தினசரிச் செலவுரூ. 15.50
நாம் ஒரு நாளைக்கு யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யத் தயாராக இருப்பதற்கே (ஸ்மார்ட்போன் + இன்டர்நெட் வழியாக) தோராயமாக ரூ. 15.50 வரை தினமும் மறைமுகமாகச் செலவிடுகிறோம்.
தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சியால் இந்தியாவில் பணப் பரிவர்த்தனைகள் எளிதாகிவிட்டன என்பதில் ஐயமில்லை.
ஆனால், “இலவசம்” என்று நாம் நினைக்கும் பல சேவைகளுக்குப் பின்னால் மொபைல் கட்டணம், இணையச் சேவை எனப் பயனர்களின் தனிப்பட்ட மறைமுகச் செலவுகளும், அரசு மற்றும் வங்கிகள் ஏற்கும் கோடிக்கணக்கான உள்கட்டமைப்புச் செலவுகளும் ஒளிந்துள்ளன என்பதே நிதர்சனமான உண்மை!




