தமிழகத்தில், பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு, உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், கறிக்கோழி பண்ணைகளிலிருந்து கறிக்கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு, 8 – 12 மணி நேரத்துக்கு முன்பு, கறிக்கோழியின் எடையை அதிகப்படுத்தி காட்டுவதற்காக, விற்பனைக்கு அனுப்பும் கோழிகளுக்கு கடைசி வரை தீவனம் கொடுக்கப்படுகிறது. இதனால், இறைச்சியோடும், கோழிக்கழிவுகளோடும் செறிக்காத தீவன துகள்கள் கலந்து சுற்றுச்சூழல் மாசு மற்றும் இறைச்சி வணிகர்களுக்கு பொருளாளதார இழப்பு ஏற்படுகிறது.
அவற்றை கருத்தில் கொண்டு, கறிக்கோழிகளுக்கு, 12 மணி நேரத்திற்கு முன்பே, தீவனம் வழங்குவதை நிறுத்தும் நெறிமுறையை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு, வரும், 31 முதல், தமிழகம், புதுச்சேரியில், கோழி இறைச்சி விற்பனை நிறுத்தும் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன் காரணமாக, சிக்கன் விற்பனை மூலம் கிடைக்கும் வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.
இது குறித்து, தமிழ்நாடு கறிக்கோழி மொத்த விற்பனையாளர்கள் சங்க, நாமக்கல் மாவட்ட துணைத்தலைவர் ஜோசப் சாம்சன் கூறியதாவது: தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு நடத்தும், கோழி இறைச்சி விற்பனை நிறுத்தப் போராட்டத்துக்கு, நாங்களும் ஆதரவு தெரிவித்துள்ளோம். நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை, 600க்கும் மேற்பட்ட கோழி கறிக்கடைகள் உள்ளன.
அவற்றில், தினமும், சராசரியாக தலா 100 கிலோ வீதம், மொத்தம், 60,000 கிலோ பிராய்லர் கோழிக்கறி விற்பனையாகிறது. இந்த போராட்டம் காரணமாக, நாள் ஒன்றுக்கு ரூ. 1.50 கோடி மதிப்பில் கறிக்கோழி வர்த்தகம் பாதிக்கப்படும் என கூறினார்.




