மருத்துவர்கள் மீதான தாக்குதலால் தமிழகத்தில் மகப்பேற மருத்துவர்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, மகளிர் மருத்துவர்கள் சங்க தலைவர் தெரிவித்தார்.
கடந்த 2024ம் ஆண்டு ஆக. 9ல் கொல்கத்தாவில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதையொட்டி பொதுமக்களிடையே மருத்துவத்துறையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஆக. 9ம் தேதி அபயா நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி நாமக்கல் மாவட்ட மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் பழைய அரசு மருத்துவமனையில் இருந்து துவங்கிய பேரணிக்கு சங்க தலைவர் மருத்துவர் சந்திரா பொன்னுசாமி தலைமை வகித்தார். பேரணியில் ஐஎம்ஏ மருத்துவர்கள் சுப்பிரமணியம், பொன்னுசாமி, செல்வகுமார், ரவிச்சந்திரன் கார்த்திகேயன், தீபன், மல்லிகா, ஹேமலதா மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு மோகனூர் ரோடு, பரமத்தி ரோடு, உழவர் சந்தை, மெயின் ரோடு வழியாக மீண்டும் அரசு மருத்துவமனையை வந்தடைந்தனர்.
பேரணி முடிவில் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் சங்க தலைவர் மருத்துவர் சந்திரா பொன்னுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மருத்துவம் என்பது தொழில் அல்ல அது மனிதகுலத்திற்கான சேவை. அனைத்து மருத்துவர்களும், ஒரு நோயாளியை காப்பாற்ற தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.
நோயின் தீவிரம் காரணமாக சில நேரங்களில் உயிரிழப்பு தவிர்க்க முடியாதது. இதுபோன்ற நேரங்களில் மருத்துவத்தின் வரம்புகளை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நோயாளி உயிரிழந்தால் அவரது குடும்பத்தினர் வேதனைப்படுவது போல, அவரைக் காப்பாற்ற முயன்ற மருத்துவர்களும் மிகுந்த மனவேதனை அடைகின்றனர்.
இதை புரியாமல் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை மீது இறந்தவர்களின் உறவினர்கள் வன்முறையில் ஈடுபடுவது இத்துறையில் உள்ளோருக்கு மிகவும் மனவருத்தத்தை அளிக்கிறது.
இதனால் தற்போது தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், அறுவை சிகிச்சை துறை போன்ற மருத்துவத்துறைக்கு படிப்பவர்கள் குறைந்து வருகின்றனர். இதனால் வருங்காலத்தில் மகப்பேறு மருத்துவவர்கள் பற்றாக்குறை ஏற்படும்.
இது மனித குலத்திற்கு ஆபத்தானதாகும். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய மாநில அரசுகளும் மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களுக்கு உரியை பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என அவர் கூறினார்.




