ஆரவல்லி மலைத்தொடரின் எல்லை வரையறை தொடர்பான பொதுக் கருத்துக்கேட்பு அறிவிப்பில் போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்றும், கிராமப்புற சமூகங்களை இந்த அறிவிப்பு சென்றடையவில்லை என்றும் கூறி ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பான அகில பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமம் கடிதம் எழுதியுள்ளது
சுற்றுச்சூழல் அமைப்பான ‘பீப்பிள் ஃபார் ஆரவல்லிஸ்’ இதேபோன்ற குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய சில தினங்களிலேயே இந்த எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.
சுப்ரீம்கோர்ட் உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த உயர் மட்டக் குழு, மத்திய அரசின் ஆரவல்லி மலைத்தொடர் பற்றிய வரைவிலக்கண அறிக்கையை ஆய்வு செய்து, ஆக 31-க்குள் தனது விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளது.
கடந்த ஜூலை 21 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்கள் தங்களது கருத்துகளையும் ஆவணங்களையும் இ-மெயில் அல்லது கூகுள் ஃபார்ம் வழியாக 21 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து வனவாசி கல்யாண் ஆசிரமம் ஆக. 2 அன்று எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: பாதிக்கப்படும் மக்கள் இந்தப் பிரச்சனையைப் புரிந்து கொள்ளவும், கிராம சபைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கவும், உரிய ஆவணங்களைத் திரட்டிச் சமர்ப்பிக்கவும் 21 நாட்கள் என்பது மிகவும் குறைவான கால அவகாசமாகும். ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களின் முதன்மை மொழிகளான இந்தி மற்றும் குஜராத்தி நாளிதழ்களில் இந்த அறிவிப்பு பரவலாக வெளியிடப்படவில்லை. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக இணையதளம், மின்னஞ்சல் மற்றும் கூகுள் படிவங்கள் மூலமாக மட்டுமே கருத்துகள் கோரப்பட்டுள்ளதால், மலை கிராமங்களில் வாழும் விவசாயிகள், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இது போய்ச்சேர வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது
ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில், இந்திய அரசியலமைப்பின் 5-வது அட்டவணையின் கீழ் உள்ள பகுதிகள் உட்பட ஏராளமான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆரவல்லி குழுவின் பரிந்துரைகள் அவர்களின் நிலம், காடு, நீர் ஆதாரங்கள், வாழ்வாதாரம் மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தைப் நேரடியாகப் பாதிக்கும் என்பதால், முறையான கலந்தாய்வு அவசியம் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆரவல்லி குழு ஆக. 6 முதல் ஆகஸ்ட் 10 வரை கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், முறையான ஆய்வுக்குக் கள அளவில் மட்டும் குறைந்தது 40 நாட்கள் தேவைப்படும் என்றும், ராஜஸ்தானில் 2 வாரங்களும் பிற மாநிலங்களில் தலா ஒரு வாரமும் நேரடி உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் வனவாசி கல்யாண் ஆசிரமம் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக ‘பீப்பிள் ஃபார் ஆரவல்லிஸ்’ அமைப்பும், ஆரவல்லியைச் சார்ந்து வாழும் மக்களின் கருத்துகளைப் பெறாமல் அறிக்கை தயாரிப்பது முறையானதாக இருக்காது எனக் குழுவுக்குக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.




