ஜேடர்பாளையத்தில் உள்ள நாமக்கல் மாநகராட்சி குடிநீர் திட்டத்தை, மேயர் கலாநிதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாகநராட்சியில் தற்போது மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. மோகனூர் காவிரி குடிநீர் திட்டத்தில் இருந்து 14 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 25 வார்டு பொதுமக்களுக்கு ஜேடர்பாளையம் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம், நாள் ஒன்றுக்கு 16.5 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் உறிஞ்சுவது குறைந்துள்ளது. இதை மேம்படுத்துவது குறித்து, ஜேடர்பாளையம் குடிநீர் திட்ட அலுவலகத்தில், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
குடிநீர் திட்டத்தில் உள்ள மோட்டார்களை முறையாக பராமரித்து, தடையின்றி குடிநீரை உறிஞ்சி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார். ஜேடார்பாளையம் ஆற்றில் உள்ள தலைமை நீரேற்று நிலையம் மற்றும் கபிலக்குறிச்சியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை மேயர் கலாநிதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள், உதவிப் பொறியாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




