Close
ஆகஸ்ட் 12, 2026 11:41 மணி

நாமக்கல்லில் 8 மாதங்களில், 17 கொலைகள் சாலை விபத்தில் 330 பேர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு கருத்தரங்கில், போலீஸ் எஸ்.பி. யாதவ் கிரிஷ் அசோக் பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில், 8 மாதங்களில், 17 கொலைகள் நடந்துள்ளது, சாலை விபத்தில் 330 பேர் உயிரிழந்துள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்.

நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில், சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. நாமக்கல் தெற்கு ஆர்டிஓ முருகேசன் வரவேற்றார். ஈரோடு டிடிசி தாமோதரன், சட்டக்கல்லூரி முதல்வர் அருண், சாலை பாதுகாப்பு மன்ற மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல், தற்போது வரை, 8 மாதங்களில், 17 கொலை வழக்குகளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால், அதே காலகட்டத்தில், சாலை விபத்துகளில் மட்டும் 330 பேர் உயிரிழந்துள்ளனர். கொலை குற்றங்களைவிட, சாலை விபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள், 20 மடங்கு அதிகமாக உள்ளன.

வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம். உரிமம் இல்லாமல் யாரும் வாகனங்களை ஓட்டக் கூடாது. மோட்டார் வாகனச் சட்டப்படி, 18 வயது நிரம்பாத சிறுவர்களிடம் வாகனத்தைக் கொடுக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

உயிரைப் பாதுகாக்கும் கவசம் ஹெல்மட் என்பதை உணர்ந்து, டூ வீலர்களில் செல்வோர் அனைவரும் முறையாக ஹெல்மட் அணியவேண்டும். மாணவர்கள்தான் மாற்றத்தின் தூதுவர்கள். ரோட்டில் செல்லும்போது, மொபைல் போன் பேசக் கூடாது.

போக்குவரத்து விழிப்புணர்வுப் பயிற்சியில் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை, உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று  பேசினார்.

இந்த கருத்தரங்கில் போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், செந்தில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top