டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மதுபான சில்லரை விற்பனை கடை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை சம்பளம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், மதுபான சில்லரை விற்பனையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், ஆன்லைன் மது விற்பனை திட்டத்தை கைவிட வேண்டும், அரசின் கொள்கை முடிவால் மூடப்படும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரந்தர பணி வழங்க வேண்டும்.
பணியின்போது உயிரிழக்கும் டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு பணி வழங்க வேண்டும். கல்வித் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும். கடை வாடகை, மின் கட்டணம், இறக்கு கூலி, மதுபான சேதாரம் உள்ளிட்ட கூடுதல் செலவினங்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.




