Close
ஏப்ரல் 24, 2026 2:38 காலை

குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் சட்ட திருத்தம் தேவை: லோக் ஆயுக்தா உறுப்பினர் பேச்சு

நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற, கிரிமினல் சட்டங்கள் குறித்த, தேசிய கருத்தரங்கில், தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நீதிபதி ராமராஜ் பேசினார்.

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில், இந்திய கிரிமினல் சட்டங்களில் உள்ள சமகால பிரச்சனைகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) அருண் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நீதிபதி ராமராஜ் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது: குற்றம் நடைபெறும் போது காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நீதிமன்ற விசாரணை நடைமுறைகள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் போன்றவை இந்திய கிரிமினல் சட்டங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்தியாவில் குற்றங்களால் பாதிக்கப்படுவோருக்கு உதவும் வகையிலான சட்டங்கள் போதுமானதாக இல்லை. குற்றங்களாலும் அதிகாரத்தை மீறுவதாலும் பாதிக்கப்படுவோருக்கான அடிப்படை கொள்கைகள், ஐ.நா சபையால் கடந்த 1985 நவம்பர் 29 அன்று உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில நாடுகள் அனைத்து குற்றங்களாலும் பாதிக்கப்படுவோருக்கு உதவும் வகையில் சட்டங்களை இயற்றியுள்ளன.

அனைத்து வகையான குற்றங்களாலும் பாதிக்கப்படுபவருக்கு வழக்கு பதிவு செய்யவும், மருத்துவ உதவி செய்யவும், உளவியல் ரீதியான பிரச்சினைகளை சரி செய்யவும் நீதிமன்றத்தில்  சட்ட உதவி செய்யவும் நிதி உதவி செய்யவும் அவர்களது பாதுகாப்புக்கும் பொருத்தமான சட்டம் தற்போது தேவையாகும். இதன் மூலம் குற்றவியல் நிர்வாகத்தில் சமகாலத்திய அவசியமான குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை வலுப்படுத்த முடியும்.

இரண்டாம் உலகப்போரில் இறந்தவர்களை காட்டிலும் அதிகமாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் வாகன விபத்துக்களால் இறப்பும் உடல் சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. வாகன விபத்துக்களால் பாதிக்கப்படுபவருக்கு இழப்பீடு பெற்று தரும் பணியை அரசே மேற்கொள்ளலாம். இதற்காக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உதவி சட்டம் ஒன்றை உருவாக்கி செயல்படுத்தினால் பாதிக்கப்படுவோருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இந்த சட்டம் மூலமாக தேசிய அளவிலும், மாநில அளவிலும் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டோருக்கான உதவி ஆணையங்களை அமைக்க வேண்டும். அரசுக்கு எவ்வித செலவு இல்லாமல் இழப்பீட்டுத் தொகையிலிருந்து குறைந்த நிர்வாக கட்டணத்தை பெற்று ஒரு நிதியத்தை உருவாக்கலாம். அதில் அனைத்து வக்கீல்களையும் இணைத்து செயல்படுத்துவதன் மூலமாக அனைத்து வக்கீல்களும் நிரந்தர வருமானம் பெற முதடியும் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் மாஜிஸ்திரேட் ராஜகுமாரன், ஏற்காடு மாஜிஸ்திரேட் இளஞ்செழியன், வக்கீல்கள் தமயந்தி, அமர்நாத் ஆகியோர் பேசினார்கள். உதவி பேராசிரியர்கள் சுமதி, சுவர்ணலட்சுமி, பிரியா, ரமேஷ் உள்ளிட்ட திரளான சட்டக்கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top