நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், மாரப்பநாயக்கப்பட்டி ஆர்.சி. தொடக்கப்பள்ளியில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் பேசியதாவது: கிராமப்புற மக்களிடையே அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி, 310 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. 100 நாள் கிராமப்புற வேலைத் திட்டம் என்பது ஜூலை 1-லிருந்து, விக்சித் பாரத் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் என்று அழைக்கப்படுகிறது. இதை 125 நாளாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில் இது 150 நாட்ககளாக உயர்த்தப்பட்டுள்ளது. 150 நாள் என்பது ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ரூ.50,000 சம்பளமாக கிடைக்கிறது. அந்தத் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் முழுமையான வேலை நாட்களைக் கொடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு அதுபோன்ற வேலை சரியாகக் கிடைக்காவிட்டால் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் செய்யலாம் என்று கூறினார்.
கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சுதந்திர தின விழாவினையொட்டி நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் மாவட்ட ஆட்சியர் மதுபாலன், எம்எல் திலீப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




