நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கோரமான திடீர் வெள்ளப் பெருக்கில் 272 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால், இந்த பேரிடர் நிகழ்வதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே, இமயமலைப் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவது குறித்து இரண்டு முக்கிய ஆய்வறிக்கைகள் எச்சரிக்கை விடுத்திருந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
காத்மாண்டுவில் செயல்பட்டு வரும் ‘சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம்’ கடந்த மார்ச் மாதம் இரண்டு ஆய்வறிக்கைகளை வெளியிட்டது. இந்தியா, நேபாளம், பூடான், சீனா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பு, இந்து குஷ் இமயமலைப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து வருகிறது.
இந்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
- 1975 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பனிப்பாறைகளின் தடிமன் 27 மீட்டர் வரை குறைந்து உருகியுள்ளது.
- 1990 முதல் 2020 வரையிலான முப்பதாண்டு காலகட்டத்தில், இந்து குஷ் இமயமலைப் பகுதியில் 12 சதவீத பனிப்பாறை பரப்பளவும், 9 சதவீத பனி இருப்புகளும் முற்றிலுமாக அழிந்துள்ளன.
- 2000-ம் ஆண்டிற்குப் பிறகு பனி உருகும் வேகம் இருமடங்காக அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் பனிப்பாறைகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாத மிக மோசமான அபாய கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த திடீர் வெள்ளப் பெருக்குக்கான சரியான காரணத்தை விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும், பருவநிலை மாற்றத்தால் மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மிகவும் கவலையளிக்கும் விஷயமாக, 4,000 மீட்டர் மற்றும் அதற்கும் உயரமான பகுதிகளில் முன்பு பனிப்பொழிவு இருந்த நிலையில், தற்போது புவி வெப்பமடைதல் காரணமாக மழை பெய்து வருகிறது. அதிக உயரமுள்ள பகுதிகளில் பனி மற்றும் பாறைகள் சரிந்து, போதே கோஷி நதியின் கிளை நதியான லெண்டே கோலாவில் பெருமளவில் விழுந்திருக்கலாம். இதனால் ஆற்றின் ஓட்டம் தடைபட்டு, திடீரென பெரும் வெள்ளமாக தண்ணீர், வண்டல் மற்றும் பெரிய பாறைகள் கீழ்நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பருவநிலை மாற்றத்தால் பனிப்போர்வைகள் குறைந்து வருவதால், வெறும் பாறைகள் நேரடியாக வெயிலில் பட்டு அதிக வெப்பத்தை ஈர்க்கின்றன. இது மலைச்சரிவுகளை மேலும் பலவீனமாக்கி இதுபோன்ற பேரிடர்களுக்கு வழிவகுக்கிறது என ஐஐடி இந்தூரின் இணைப் பேராசிரியரும், ஐசிஐஎம்ஓடி அமைப்பின் மூத்த நிபுணருமான முகமது ஃபரூக் ஆசம் விளக்கமளித்துள்ளார்.
துருவப் பகுதிகளைத் தவிர்த்து, உலகிலேயே அதிக பனி இருப்பைக் கொண்டது இந்து குஷ் இமயமலைப் பகுதிதான். இங்கு 55,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 63,700 பனிப்பாறைகள் அமைந்துள்ளன. ஆசியாவின் 10 முக்கிய நதிகளுக்கு இவைதான் பிரதான நீர் ஆதாரமாக விளங்குகின்றன.
சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிப்படுகைகளில் அதிகளவிலான பனிப்பாறைகள் அழிந்து வருவது, இந்த நதிகளை நம்பியிருக்கும் பல கோடி மக்களின் குடிநீர், உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பிற்கு எதிர்காலத்தில் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்பதை இந்த ஆய்வறிக்கைகள் ஆணித்தரமாக உணர்த்துகின்றன.

