Close
ஆகஸ்ட் 30, 2026 10:56 காலை

கேரளாவிற்கு கனிம வளம் கொண்டு செல்ல நிரந்தர தடை விதிக்க வேண்டும்: பா.ம.க. மாநில சிறுபான்மை பிரிவு தலைவர்

25% மலைகள் உள்ள தமிழகத்தில் இருந்து 48% மலைகள் உள்ள கேரளாவிற்கு கனிம வளம் கொண்டு செல்ல நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று தென்காசியில் பா.ம.க. மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் மைதீன் பேட்டி.

தென்காசி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் தென்காசி இரயில் நிலையம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

செயற்குழு கூட்டதிற்கு தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர்கள் சேது.அரிகரன், அய்யம்பெருமாள் பிள்ளை, திருமலை குமாரசாமி யாதவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயற்கு கூட்டத்தில் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக்மைதீன், சமூக நீதிப் பேரவை மாநில மகளிர் அணி துணைத் தலைவி வழக்கறிஞர் சகிலா, மாநில வர்த்தக அணி தலைவர் தங்கராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கட்சியின் வளர்ச்சி குறித்தும் சாதி, மத பாகுபாடின்றி உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் வகையில் செயல்படுவது குறித்து சிறப்புரையாற்றி பேசினார்.

இதனைத் தொடர்ந்து மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் மைதீன் செய்தியாளர்களிடம் பேட்டியின் போது கூறியதாவது :  பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசின் ஆணைக்கிணங்க தென் மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான ஆயத்த கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி தென்காசி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தென்காசியில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

தென் மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக இருப்பது தாமிரபரணி நதி. இந்த தாமிரபரணி நதி குறித்து ஆண்ட கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், மண்ணின் மைந்தர்கள் என்று கூறிக் கொள்ளும் பலரும் தாமிரபரணி நதியை காக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த 2017ம் ஆண்டு தாமிரபரணி நதியை காக்க வேண்டும் என்று நடை பயணம் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தர்மபுரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதிலும் சட்டமன்றத்தில் தாமிரபரணி நதியை மையப்படுத்தி, அந்த நதியை சுத்தம் செய்து காக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர் சௌமியா அன்புமணி மட்டுமே. இது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பட்டி தொட்டி எங்கிலும் பாட்டாளி மக்கள் கட்சி குறித்து மக்கள் பேசி வருகின்றனர்.

சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தேவையில்லாத விவாதங்களை நடத்தி வரும் நிலையில் சட்டமன்றத்தில் தமிழக மக்களுக்கு தேவையான பிரச்சினைகள் குறித்தும் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் குறித்தும் பேசுகின்ற கட்சியாக பாமக உள்ளது.

மேலும் பாமக மீது இருந்த ஜாதிய பிம்பம் தற்போது உடைக்கபட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தென் மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் அன்புமணி ராமதாஸின் நேரடி பார்வையில் இயங்கும்.

சிறுபான்மை மக்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்தது யார் என்று சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. 3.5% இட ஒதுக்கீடு கலைஞர் கருணாநிதி வழங்கினார். அதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் அந்த இட ஒதுக்கீடு பெற்று தருவதற்கு அழுத்தம் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே.

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்றாலும், கூட்டணியில் நின்றாலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதிகப்படியான உள்ளாட்சி பிரதிநிதிகளை பெறுவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி இருக்கிறோம். தமிழ்நாட்டு பிரச்சினைகளை பற்றி பேசும் தலைவராக அன்புமணி ராமதாஸ் விளங்கி வருகிறார்.

தமிழ்நாட்டில் 25% மலைகள் உள்ளது. ஆனால் கேரளாவில் 48 % உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து களிமவளத்தை கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர். தற்போது தவெக அரசு 3 மாதம் தற்காலிக தடை. விதித்துள்ளது.

இந்த தடையை நீக்க வேண்டும் என்று கேரளா தரப்பில் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கனிமவளம் கொண்டு செல்வதற்கு தமிழக அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் மகாதேவன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கெய்சர்அலி, மாவட்ட இளைஞரணி திருமலை குமார், ஒன்றிய செயலாளர்கள் சண்முகசுந்தரம், சங்கரநாராயணன், கருப்பசாமி, சிவன் ராஜ், மாரியப்பன், தங்கராஜ், ஆலங்குளம் தொகுதி மகளிர் அணி தலைவி சரஸ்வதி, இலஞ்சி பேரூர் கழக இளைஞர் அணி தலைவர் அன்புமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம்குமார் உள்பட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top