தென்காசியில் அமைந்துள்ள ஐசிஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் முதுகெலும்பு ஆரோக்கியம் மற்றும் சரியான உடல் அமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் “நிமிர்ந்து வளரும் இந்தியா ” என்ற சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி , இந்திய எலும்பு முறிவு சங்கம் மற்றும் தமிழ்நாடு எலும்பு முறிவு மருத்துவர் சங்கத்தின் வழிகாட்டுதலில் நெல்லை ஆர்த்தோ கிளப் சார்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் தலைமையேற்று ஒருங்கிணைத்தார். மேலும், எலும்பியல் மருத்துவ நிபுணர்களான டாக்டர் முத்துராமன் மற்றும் டாக்டர் பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு உடல் நலன் தொடர்பான பல்வேறு முக்கிய ஆலோசனைகளையும் விழிப்புணர்வு கருத்துகளையும் வழங்கினர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பள்ளி நிர்வாகம் மருத்துவக் குழுவினரை தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பு ஆசிரியர் வைகுண்டம் மற்றும் தலைமை ஆசிரியர் வரவேற்று, மாணவர்களின் ஆரோக்கியமே நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதை வலியுறுத்தி பேசினார்கள்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவர்கள், இன்றைய மாணவர்கள் அதிக நேரம் மொபைல் போன், கணினி மற்றும் பிற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நிலை மாற்றங்கள், தவறான உட்காரும் பழக்கம், கழுத்து மற்றும் முதுகுவலி, முதுகெலும்பு வளைவு போன்ற பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
டாக்டர் ஜெஸ்லின் பேசுகையில், “மாணவர்கள் ஆரோக்கியமான உடல் அமைப்புடன் வளர்வது கல்வி முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானது. சிறு வயதிலிருந்தே சரியான உட்காரும் முறை, நிற்கும் முறை மற்றும் உடற்பயிற்சி பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் எதிர்காலத்தில் பல்வேறு எலும்பு மற்றும் தசை சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்க்க முடியும். இதற்காகவே ‘நிமிர்ந்து வளரும் இந்தியா’ என்ற திட்டம் பள்ளி மாணவர்களிடையே செயல்படுத்தப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்தார்.
பின்னர் உரையாற்றிய தென்காசி தலைமை மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவர் முத்துராமன், முதுகெலும்பு மனித உடலின் முக்கிய தூண் என்பதையும், அதனை பாதுகாப்பது ஒவ்வொரு மாணவரின் பொறுப்பாகும் என்பதையும் விளக்கினார். பள்ளிப்பையை இரு தோள்களிலும் சமமாக சுமக்க வேண்டும், அதிக எடையுள்ள பைகளை தவிர்க்க வேண்டும், நீண்ட நேரம் ஒரே நிலையில் அமராமல் இடைவெளி விட்டு எழுந்து நடக்க வேண்டும், தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
டாக்டர் பிரபாகரன் மாணவர்களிடம் முதுகெலும்பு வளைவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் எளிதில் சிகிச்சை அளிக்க முடியும் என்றும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களின் உடல் அமைப்பில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், சரியான உடல் நிலையை பராமரிக்க உதவும் எளிய உடற்பயிற்சிகளையும் நேரடியாக செய்து காண்பித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மருத்துவர்களின் உரையைக் கேட்டு, தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். சரியான உட்காரும் முறை, நிற்கும் முறை, நடக்கும் முறை, பள்ளிப்பையை சுமக்கும் முறை மற்றும் உடற்பயிற்சிகளை மருத்துவர்கள் செய்முறை விளக்கத்துடன் எடுத்துக்காட்டியபோது, மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சிகளை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களிடையே முதுகெலும்பு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் ஆரோக்கியமான மற்றும் தன்னம்பிக்கையுள்ள இளைஞர்களை உருவாக்குவதாகும். மருத்துவர்களின் ஆலோசனைகள் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.
பின்னர் மருத்துவர்களும் மாணவர்களும் இணைந்து நிமிர்ந்து வளரும் இந்தியா என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில், பள்ளி நிர்வாகம் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், எலும்பியல் மருத்துவர்கள் டாக்டர் முத்துராமன் மற்றும் டாக்டர் பிரபாகரன் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்தது. மேலும், மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இதுபோன்ற சமூக நலத் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என அனைவரும் உறுதியளித்தனர்.
“நிமிர்ந்து வளரும் இந்தியா” என்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாணவர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்கி, உடல் நலத்துடன் வளர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்காற்றும் சிறந்த குடிமக்களாக உருவாக ஊக்கமளித்த பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.




