Close
ஆகஸ்ட் 30, 2026 10:56 காலை

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் ஆண்டு ஆய்வு

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு ஆய்வு நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் தலைமையில் நடந்த இந்நிகழ்விற்கு, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜூ முன்னிலை வகித்தார்.

பள்ளித் துணை ஆய்வாளர்கள் குரு. மாரிமுத்து, வேலுசாமி, அருகாமைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகப் பணியாளர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.

முன்னதாக, காலை வணக்கக் கூட்டத்தில் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம், தொன்மை பாதுகாப்பு மன்றம், இளஞ்செஞ்சிலுவை சங்கம், சாரணர் இயக்கம் மற்றும் பசுமைப்படை மாணவர்கள் பங்கேற்று, அலுவலர்களுக்குக் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை அளித்து வரவேற்றனர்.

உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன், செழியன் மற்றும் நீதி ராஜன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், தமிழர்களின் பாரம்பரிய நிலத்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றுக்கான பள்ளியின் கொடி அணிவகுப்பு காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது அழகாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் நடைபெற்றது.

ஆய்வின் போது, பள்ளியின் அனைத்து வகுப்பறைகளுக்கும் நேரில் சென்ற அலுவலர்கள், ஆசிரியர்-மாணவர் அணுகுமுறை, கற்றல்-கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் பள்ளிப் பதிவேடுகள் உள்ளிட்டவற்றை நுணுக்கமாக உற்றுநோக்கி ஆய்வு செய்தனர்.

நிகழ்வின் நிறைவாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், பள்ளித் தலைமையாசிரியை ராஜலெட்சுமி அனைவரையும் வரவேற்றார். உதவித் தலைமையாசிரியர்கள் குமரவேல் மற்றும் தெய்வீகன், கணித ஆசிரியர் கணேசன், கணினி ஆசிரியர் சரவணன், தமிழாசிரியர் செல்வக்குமார், தாவரவியல் ஆசிரியை முருகாயி ஆகியோர் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் கூறுகையில், வரும் கல்வியாண்டில் இப் பள்ளி 100% தேர்ச்சி பெற அனைத்து ஆசிரியர்களும் உறுதியேற்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் அடிப்படை எழுத-படிக்கப் பயிற்சியளித்தாலே அவர்கள் எளிதாகத் தேர்ச்சி பெற்றுவிடுவர்.

அடிப்படை வாய்ப்பாடுகளைக் கற்றுத் தருவது கணிதப் பாடத்தின் மீது மாணவர்களுக்கு அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நமது மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்ததற்கு ஆசிரியர்களின் கடும் உழைப்பும் கூட்டு முயற்சியுமே காரணம். இந்தச் சாதனையை இந்தாண்டும் தக்கவைக்க, நாம் அதைவிடக் கூடுதலாக உழைக்க வேண்டும்.

ஏழை விவசாயக் குடும்பங்களிலிருந்து வரும் இந்த மாணவர்களே நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களின் எதிர்காலத்தைச் சிறந்த முறையில் கட்டமைக்க வேண்டியது நம் பொறுப்பு என்று கூறினார்.

முன்னதாக பேசிய மாவட்டக் கல்வி அலுவலர் ராஜூ, இப்பள்ளி மன்ற செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன, ஆசிரியர்களின் ஒற்றுமை மகிழ்ச்சியளிக்கிறது. தங்கள் பிள்ளைகளையும் இதே அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கும் ஆசிரியர்களின் செயல் பாராட்டுக்குரியது.

இந்த ஆண்டு ஏழு புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டில் இந்த பள்ளியில் இருந்து அதிகமானவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்திருப்பது பாராட்டுக்குரியது, இந்த சலுகையை பயன்படுத்தி வருங்காலத்தில் அதிக மாணவர்கள் உயர் கல்வி படிப்புக்கு சேர வேண்டும் என்றும், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பது ஒரு சவாலான காரியம். எனினும், இப்பள்ளியிலேயே படித்துத் தற்போது ஆசிரியர்களாகப் பணியாற்றும் 10-க்கும் மேற்பட்டோர் இங்கு இருப்பது மிகப்பெரிய பலம். அதனால் நீங்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் கற்பித்து, 100% தேர்ச்சியை நிச்சயமாகச் சாதிப்பீர்கள் என்று நம்புகிறேன் எனப் பாராட்டினார்.

நிறைவாக, பள்ளி ஆசிரியர் மன்றச் செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top