நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை இயல்பைவிட 104.89 மி.மீ குறைவாக மழை பெய்துள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ ஆகும். தற்போது வரை 219.47 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முடிய இயல்பு மழையளவு 323.51 மி.மீ., ஆகும். ஆனால், இயல்பு மழையளவை விட 104.89 மி.மீ குறைவான மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில், இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை நெல் 249 ஹெக்டேரும், சிறுதானியங்கள் 16,283 ஹெக்டேர், 2,383 ஹெக்டேர் பயிறு வகைகள், 15,401 ஹெக்டேர் எண்ணெய் வித்துக்கள், பருத்தி 499 ஹெக்டேர் மற்றும் கரும்பு 3,763 ஹெக்டேர் என 38,578 ஹெக்டேரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தோட்டக்கலைப் பயிர்களான தக்காளி, கத்திரி, வெண்டை, வாழை 34,835.38 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசி மனுக்கள் அளித்தனர். அக்கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டார். டிஆர்ஓ சரவணன், சிப்காட் டிஆர்ஓ கண்ணன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




