நீட் தேர்வுக்கு எதிராகவும், சமூகநீதிக்காகவும் குரல் கொடுத்த அனிதாவின் 9-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தென்காசி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்காசி கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவம் படித்து மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் கல்வியில் சிறந்து விளங்கியவர். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் அனிதா தனது தரப்பில் வாதிட்டதுடன், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். 2017-ஆம் ஆண்டு நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின்னர், 01.09.2017 அன்று அனிதா உயிரிழந்தார். அவரது மறைவு தமிழகத்தில் நீட் தேர்வு, கல்வியில் சமூகநீதி மற்றும் மாநில உரிமைகள் குறித்த விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியது.
அவரது நினைவு நாள் நிகழ்ச்சிக்கு தென்காசி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். கல்வி அனைவருக்கும் சமமான வாய்ப்புடன் கிடைக்க வேண்டும் என்றும், சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் கழகத்தினர் உறுதியேற்றனர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி, ஒன்றியச் செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனித்துரை, வழக்கறிஞர் சிவக்குமார், வீராணம் ஷேக் முகமது, செங்கோட்டை நகரச் செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மஹ்முதா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர்கள் முத்து சுப்பிரமணியன், சபீக் அலி, மாவட்ட கலை இலக்கிய அணி கருப்பண்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சூர்யாமணி (எ) ஈஸ்வரன், குற்றாலம் குற்றாலநாத சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் ஐ.டி.ஐ. ஆனந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




