நாமக்கல் மாவட்டத்தில் அடிக்கடி நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதேஸ்வரன் எம்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; நாமக்கல் மாவட்டம் லாரி, கோழிப்பண்ணை தொழில், பள்ளி, கல்லூரிகள், சேகோ பேக்டரி, ரிக் தொழில், டெக்ஸ்டைல் தெழில் உள்ளிட்ட தொழில் வளம் நிறைந்த மாவட்டமாகும்.
இவ்வளவு சிறப்பு பெற்ற மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடைபெறுவது கவலை அளிக்கிறது. சமீபத்தில் ப.வேலூரில் தம்பதியை கட்டிப்போட்டு பணம் நகை கொள்ளை, குப்பநாய்க்கனூர் பகுதியில் பூட்டிய வீட்டின் கதவை உடைந்து நகை பணம் கொள்ளை, கடந்த 1 மாதம் முன்பு பள்ளிபாளையத்தில் நகைக்காக மூதாட்டி படுகொலை குமராபாளையம் பகுதயில் சிறுமதி மீதான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது.
கொங்கு மண்டலம் என்றும் தொழில்வளர்ச்சியில் மேலோங்கி அமைதி பூங்காவாக திகழும் பகுதி. அதில் குறிப்பாக நாமக்கல் மாவட்டம் மிகவும் அமைதியான பகுதி. இங்கு தற்போது அடிக்கடி நடைபெறும் குற்ற சம்பவங்கள் மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும்.
எனவே மாவட்ட காவல்துறை இரும்பு கரம் கொண்டு குற்றங்களை தடுக்க வேண்டும். மேலும் கூடுதல் போலீசாரை நியமித்து ரோந்து பணியை திவீரப் படுத்த வேண்டும். வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் அவர்களுடைய முகவரிகள், அடையாள அட்டைகள் தெளிவாக பெற்று இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இது குறித்து மாவட்ட காவல் துறை, மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து கலந்தாய்வு நடத்தி குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




