Close
ஆகஸ்ட் 30, 2026 10:55 காலை

இனித் தமிழ் இயக்கம்தான் எங்கள் இலக்கு: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்

நாமக்கல்லில் நடந்த தமிழில் கையெழுத்து இயக்கம் தொடக்க விழாவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேசினார்.

எங்கள் தமிழ்நாடு இயக்கத்தின் ஒரு அங்கமான, இனித்தமிழ் இயக்கம் சார்பில், தமிழில் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா, நாமக்கல் மாவட்டம், லத்துவாடி நம்பிக்கை இல்லத்தில் நடந்தது. மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் பழனியாண்டி தலைமை வகித்தார். நம்பிக்கை இல்லை நிர்வாகி கதிர்செல்வன் வரவேற்றார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் நவலடி, பசுமை நாமக்கல் ஒருங்கிணைப்பாளர் தில்லைசிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நம்பிக்கை இல்ல நிர்வாகியும், முன்னாள் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சகாயம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழில் கையெழுத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:

110 ஆண்டுகளுக்கு முன், சமஸ்கிருத ஆதிக்கத்தால் கிரேக்க, லத்தீன் மொழிகளுக்கு இணையான, இலக்கணம் கொண்ட தமிழ் மொழி மங்கிய நிலையில் இருந்தது. 1916ல், மறைமலை அடிகளார் தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கினார்.

110 ஆண்டுகளுக்கு பின், மணிப்பிரவாள நடையிலிருந்தும், பிற மொழிகளின் தாக்கத்திலிருந்தும், தமிழை மீட்கவே இனித்தமிழ் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்திற்கு பின்னால், எவ்வித அரசியல் லாபமோ, பதவி ஆசையோ இல்லை. உலகிலேயே மூத்த மொழியான தமிழ் அழிந்துவிடுமோ என்ற அச்சமும், மொழியைக் காக்க வேண்டிய கடமையுமே இதன் பின்னணியில் உள்ளது.

எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சராக வாய்ப்பு கிடைத்தது. அவற்றை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இங்கு தமிழ் பணி ஆற்ற வந்துள்ளேன். திருச்சி கிழக்கு நமது இலக்கு அல்ல; இனித் தமிழ் இயக்கம் தான் எங்கள் இலக்கு. நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால், மற்ற மொழி திணிப்புக்கு எதிரானவர்கள்.

மம்மி, டாடி என்ற அந்நிய மொழி வார்த்தைகளை கற்றுக் கொடுக்கும் இடமாக பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில், அரசு ஊழியர்கள் முதல், ஆசிரியர்கள் வரை, தமிழில் கையெழுத்திட தயங்கும் தாழ்வு மனப்பான்மை நிலவுகிறது. ஆங்கில வழிக்கற்றல் மற்றும் அன்றாடப் பயன்பாட்டில் தமிழ் புறக்கணிக்கப்படுவதை மாற்றி, மக்களிடையே தமிழ் உணர்வை விழிப்படையச் செய்வதே இயக்கத்தின் முதன்மை இலக்கு. இவ்வாறு அவர் பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top