பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க அனைவரும் உறுதிமொழியேற்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.
நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து பேசியதாவது;
கோடைகாலத்தில் வீசக்கூடிய அளவிற்கு, இந்த ஆகஸ்ட் மாதத்தில் வெயில் அடிப்பதால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், காலநிலை மாற்றம் தான். அந்த காலநிலை மாற்றம், மனிதர்களால் உருவாக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், நேபாளத்தில் ஒரு பெரிய பேரழிவு நடந்தது. மேலும், தற்போதைய காலத்தில் விலங்கினங்கள் அழிந்து வருகின்றன. இவை அனைத்தும், சுற்றுச்சூழல் மாசுபாடு, காலநிலை மாற்றத்தினால் மட்டுமே நேரிடுகிறது. அதனால், நாம் இந்த சுற்றுச்சூழலுக்கு எதிராக, அன்றாடம் செய்யக்கூடிய பழக்கவழக்கங்களை சிறிதளது மாற்றிக் கொண்டாலே, சுற்றுச்சூழலை சிறப்பாக பாதுகாக்க முடியும்.
விதைப்பந்தினை எவ்வாறு செடியாகவே, மரமாகவோ வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், விதைப் பேனா வழங்கப்படுகிறது. இந்த பேனாவிற்கு கீழ் சிறிய விதைகள் இருக்கும். அதனை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க முடியும்.
தற்போது, 5,000 துணிப் பைகள் உங்களுக்கு வழங்கப்படுகிறது. உங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு அவற்றை வழங்கி, துணிப்பையின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்களது வீட்டில் இருந்தே முதல் விழிப்புணர்வினை தொடங்க வேண்டும். நாம் அதிக மரங்களை வளர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, மாணவிகளுக்குப் பயனுள்ள வகையிலும், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் நோக்கிலும், மரக்கன்றுகள் வளர்க்க உதவும் விதைப் பந்துகள் மற்றும் விதைப் பேனாக்கள் அடங்கிய, 5,000 துணிப் பைகளை வழங்கப்பட்டது.
மேலும், பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் பூங்கொத்து தயாரித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கும், வெளிநாடு சுற்றுப்பயணம் சென்ற சிறந்த மாணவியருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் புருஷோத்தமன், கே.கே.பி. குரூப் நிறுவனத் தலைவர் நல்லதம்பி, நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார், பெங்களூரு ரீடிபைன் குரூப் முதன்மை செயல் அலுவலர் ஸ்ரீநாத், தலைமை வழிகாட்டி ஸ்ரீதர் ராஜகோபால், பள்ளி தலைமையாசிரியர் சுமதி, மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜேஸ்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.




