Close
செப்டம்பர் 10, 2026 3:17 மணி

வாடிப்பட்டி அருகே கல்குவாரியால் அழியும் கிராமம் : அமைச்சர் நேரில் ஆய்வு செய்ய பொது மக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் சுந்தரவேல் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பூச்சம்பட்டி மற்றும் ராமையன்பட்டி பகுதிகளில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் குறித்துச் சமூக ஆர்வலரும் விவசாயியுமான ஞானசேகர் முன்வைத்த புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

சமூக ஆர்வலர் ஞானசேகர் வட்டாட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், அப்பகுதியில் செயல்படும் கல்குவாரிகளால் கிராம மக்கள் சந்தித்து வரும் கடுமையான பாதிப்புகளைப் விவரித்துள்ளார்:

  • குவாரிகளில் அளவுக்கு அதிகமாக வெடி வைப்பதால் சுற்றுவட்டார வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு சுவர்களில் விரிசல் விழுகின்றன. நள்ளிரவிலும் வெடிச்சத்தம் கேட்பதால் குழந்தைகள் தூங்க முடியாமல் அச்சத்தில் அவதியுறுகின்றனர்.
  • இரவு பகலாகக் கற்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரிகளால் எழும் அதிகப்படியான தூசியால் குடிநீர் ஆதாரம் மாசடைகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்குச் சுவாசக் கோளாறுகள் மற்றும் தோல் நோய்கள் ஏற்படுகின்றன.
  • கல்குவாரிகளிலிருந்து வெளியேறும் லாரிகள், சட்டத்திற்குப் புறம்பாக இயற்கை நீர்வரத்து ஓடைப் பாதையை ஆக்கிரமித்துப் பயன்படுத்தி வருகின்றன. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி நிலங்களில் தேங்கி, விவசாயம் முற்றிலும் பாழாகிறது.
  • அதிக அளவு கற்களை ஏற்றிக்கொண்டு கிராமப்புறச் சாலைகள் வழியே அதிவேகமாகச் செல்லும் கனரக லாரிகளால், குழந்தைகளும் பொதுமக்களும் சாலையில் நடமாடவே அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் ஞானசேகர் தெரிவித்ததாவது: எங்கள் பகுதியில் 6-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதிலிருந்து வரும் லாரிகள் ஓடைப் பாதையை ஆக்கிரமிப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதோடு, தூசிகளால் பயிர் மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயம் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளின் இரசாயனம் நீரில் கலந்து குடிநீரும் நஞ்சாகிறது.

இதுவரை விதிமீறலில் ஈடுபட்ட எந்தவொரு குவாரிக்கும் அதிகாரிகள் அபராதம் விதிக்கவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. எனவே, கனிம வளத்துறை அமைச்சர் பிரபு அவர்கள் நேரடியாக எங்கள் பகுதிக்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி இயங்கும் குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும். பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் விவசாயத்தையும் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என தெரிவித்தார்

கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் சுகாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ள இந்த கல்குவாரிகள் மீது மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பதே வாடிப்பட்டி பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top