நாமக்கல் மாநகராட்சி, திருச்சி ரோட்டில் உள்ள பழைய கால்நடை மருத்துவமனை வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் ரூ.9.15 கோடி மதிப்பீட்டில், பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி கட்டப்பட்டு வருகிறது. 1,320 சதுர மீட்டர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் (ஜி+4) நவீன முறையில் கட்டப்படுகிறது.
இந்த விடுதிக்கு 100 படுக்கைகள் கொண்டு தங்கும் அறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இக்கட்டிடம் மொத்தம் 121 படுக்கைகள் வரை தங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பாகவும் மனநிறைவுடனும் தங்கி, பணிக்குச் செல்லும் வகையில், இங்கு பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் படிப்பு அறை, இலவச வைஃபை வசதி, 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு கேமரா, வாஷிங் மெஷின் வசதி, ஏசி வசதிகொண்ட 6 அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகள் கொண்ட அறை, ஆர்ஓ குடிநீர் வசதி, லிப்ட் ஆகிய வசதிகளுடன் இந்த விடுதிஅமைக்கப்பட்டு பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளன.
தோழி விடுதிகட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மதுபாலன், பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். ஆய்வின் போது மாவட்ட சமூக நல அலுவலர் கவுரி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.




