நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணையர் ஆசியா மரியம் அரசு திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நல ஆணையருமான ஆசியா மரியம் நாமக்கல்லுக்கு வந்தார். அவர் மாவட்ட ஆட்சியர் மதுபாலனுடன் சென்று நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட காலை உணவின் தரத்தினை ருசித்து பார்த்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் உணவின் தரம் குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, நாமக்கல் திருச்சி ரோட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ரூ.9.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், பணிபுரியும் மகளிருக்கான தோழி மகளிர் விடுதி பணிகளை அவர் பார்வையிட்டார்.
மேலும், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் சிகிச்சை வசதிகள் குறித்து அவர் கள ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், மருந்து மாத்திரைகள் இருப்பு குறித்த பதிவேடுகளை கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வுகளின்போது, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி சாந்தி, திட்ட இயக்குநர் சீனிவாசன், முதன்மை கல்வி அலுவலர் மாதவன், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி, மாவட்ட சமூக நல அலுவலர் கவுரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




