Close
மே 11, 2024 11:22 மணி

புத்தகம் அறிவோம்… விடுதலை வேள்வியில் தமிழகம்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

சென்னை புத்தகத் திருவிழாவிற்கு அடுத்து அதிகம் பேசப்படுவது ஈரோடு புத்தகத் திருவிழா. அந்த வாசிப்புத் திருவிழாவை சிறப்பாக நடத்துவது த.ஸ்டாலின் குணசேகரன் .

அவருடைய பெரும் முயற்சியில் உருவானதுதான் “விடுதலை வேள்வியில் தமிழகம்” என்ற இந்த நூல். இரண்டு தொகுதி களாக உள்ள இந்நூலில் 100 கட்டுரைகள் இடம்பெற்றிருக் கின்றன.

100 கட்டுரைகளில் 78 கட்டுரைகள், சுதந்திர வேள்வியில் பங்கேற்ற, பூலித்தேவன், ராணி வேலுநாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, சத்தியமூர்த்தி, காமராஜ், கக்கன், கடலூர் அஞ்சலை அம்மாள் போன்ற 78 தியாகிக ளைப் பற்றியது.

மற்ற 22 கட்டுரைகளும் பொதுத் தலைப்பு களாக, தென்னியப் புரட்சி, வேலூர்ப் புரட்சி (உண்மையில் இவைகள் தாம் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள்)  சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் இதழ்கள், தமிழ் நாவல்கள், சிறுகதைகள் மாணவர்கள், தமிழ் சினிமா, நாடகங்கள், விவசாயிகள் பங்களிப்பு, வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிரகம் என்று பொதுத் தலைப்புகளில் உள்ளது.

இதில் உள்ள கட்டுரைகளை எழுதியவர்கள் பலரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள். டாக்டர் ராஜய்யன், கோ. தங்கவேலு, மணிக்குமார் போன்ற தேர்ந்த வரலாற்றாசி ரியர்கள், ராஜம் கிருஷ்ணன், தியோடர் பாஸ்கரன் போன்ற எழுத்தாளர்கள் என்று இதில் உள்ள கட்டுரையாளர்கள் யாவரும் முத்திரை பதித்தவர்கள். 5 ஆண்டுகள் கடும் உழைப்பில் உருவான 1151 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகத்திற்கு மூன்று முக்கிய ஆளுமைகள், அப்போதைய (1999) முதல்வர் கலைஞர் கருணாநிதி, சி.சுப்பிரமணியம். டாக்டர்.ராஜய்யன் அணிந்துரை வழங்கியுள்ளனர்.

“நாட்டுப்பற்றில் தமிழக வீரர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் எவருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை, இன்றைய இளைஞர்கள் உணர வழிகாட்டுகிறது இந்நூல்” என்கிறார் கலைஞர்.”இந்நூலை வெளியிடுவதன் மூலம் ஒரு அரிய தேசிய சேவையை ஸ்டாலின் குணசேகரன் புரிந்திருக்கிறார். இதற்கு தமிழகம் நன்றி செலுத்த கடமைபட்டிருக்கிறது” என்கிறார் சி.எஸ்.

இந்நூலின் வழி இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு தமிழகத்தின் பங்களிப்பை மட்டுமல்லாமல், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தையும் அறியமுடியும். ம.பொ.சிவஞானம் “விடுதலைப்போரில் தமிழகம்” மூலமும் , ஸ்டாலின் குணசேகரன் இந்த நூலின் வழியும் தமிழக வரலாற்றிற்கு பெரும் பணியாற்றி இருக்கிறார்கள்.நிவேதிதா பதிப்பகம், ஈரோடு.

…பேராசிரியர் விஸ்வநாதன்-வாசகர் பேரவை..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top