Close
மே 20, 2024 2:39 மணி

மாற்றுத்திறனாளிப் பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய புத்தகத் திருவிழாக்குழு

புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிப் பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள்.

மாற்றுத்திறனாளிப் பெண்ணின் ஆசையை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் நிறைவேற்றிய நிகழ்வு இணைய தளங்களில்  வேகமாக பரவி வருகிறது.

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவிற்கு வருகைதரும் ஆசை நிறைவேறியதால் மகிழ்ச்சியுடன் ஏராளமான புத்தகங்களை பெற்றுச் சென்றார் மாற்றுத்திறனாளிப் பெண் சுகுணா.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கொத்தம் பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம்-வாசுகி தம்பதியினர்.  இவர்களுக்கு சுகுணா (33), சுகந்தி (30) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.  இருவரும் மாற்றுத் திறனாளிகள். சுகந்திக்கு திருமணமாகிவிட்டது. முடக்குவாத தசை சிதைவு நோயல் பாதிக்கப்பட்ட நிலையில் சுகுணா பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

புதுக்கோட்டை
புத்தகத்திருவிழாவில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி பெண்

எட்டாம் வகுப்புவரை படித்துள்ள சுகுணா சிறுவயது முதல் புத்தக வாசிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக உள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவிதைகளை எழுதி வருகிறார். கவிதைக்காக இதுவரை 270 சான்றிதழ்களும், 2 விருதுகளும் பெற்றுள்ளதாகக் கூறுகிறார்.

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சுகுணா புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவிற்கு வரவேண்டும் என்ற ஆசையை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சுகுணாவை செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்து வந்தனர். அவருக்கு ஏராளமான புத்தகங்களை பலரும் பரிசளித்தனர்.

பின்னர் இதுகுறித்து  சுகுணா கூறியதாவது:  10 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த என்னை புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வைத்த அனைவருக்கும் நன்றி. இது என்னை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. எனக்குப் பிடித்த ஏராளமான புத்தகங்களை பலரும் வாங்கிக்கொடுத்தது எனக்கு மேலும் ஊக்கத்ததை அளித்துள்ளது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவிற்கு வருகைதரும் ஆசை நிறைவேறியதால் மகிழ்ச்சியுடன் ஏராளமான புத்தகங்களை பெற்றுச்சென்ற மாற்றுத்திறனாளிப் பெண் சுகுணா

தொடர்ந்து வாசிப்பதும், எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மிகவும் வறுமையில் வாடும் எனது நிலையைக் கருத்தில் கொண்டு ஏதாவது ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் பேருதவியாக இருக்கும் என்றார்.

சுகுணாவின் தாயார் வாசுகி கூறுகையில், எனது மூத்த மகள் சுகுணாவை இந்த புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கூலி வேலையும் சிறிதளவு விவசாயம் செய்து வரும் தங்களுக்கு போதிய உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top