Close
ஏப்ரல் 24, 2026 12:54 காலை

ஓங்கி அறைந்த பத்மினி, அடிவாங்கி அலறித் துடித்த சிவாஜி

சிவாஜியை ஒருமுறை அறைவதற்கே தயங்கிய பத்மினி, படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுடன் சிவாஜி கன்னத்தில் ரத்தம் வரும் அளவுக்கு அறைந்துள்ளார். ஏன் தெரியுமா?

திரையுலகில் பல படங்களில் இணைந்து நடித்துள்ள சிவாஜி பத்மினி ஜோடி இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஒரு காட்சிக்காக சிவாஜியை கன்னத்தில் பத்மினி அறைந்துள்ளார். அதன்பிறகு நடந்தது என்ன என்பது தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனது சிறப்பான நடிப்பால் பலரரையும் கவர்ந்தவர் சிவாஜி கணேசன். முன்னணி நடிகைகள் பலருடன் இணைந்து நடித்துள்ள சிவாஜி, நாட்டிய பேரொளி என்று அழைக்கப்படும் பத்மினியுடன் இணைந்து 60-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் பணம். இந்த படம் சிவாஜி நடித்த இரண்டாவது படம் என்றாலும் பத்மினி அதற்கு முன்பே பல படங்களில் நடித்துள்ளார்.

பத்மினி – சிவாஜி இருவரும் இணைந்து நடித்த எதிர்பாராதது  என்ற படம் . 1954-ம் ஆண்டு வெளியானது.  இந்த படத்தில் பத்மினி சிவாஜி இருவரும் காதலித்து வரும் நிலையில் வெளிநாட்டிற்கு படிக்க போகும் சிவாஜி, எதிர்பாராத விதமாக விமான விபத்தில் இறந்து விட்டதாக தகவல் வருகிறது.

இதனிடையே சிவாஜியின் அப்பாவை பத்மினி திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டு, திருமணமும் முடிந்து விடுகிறது.

விமான விபத்தில் சிக்கும் சிவாஜி கண்பார்வையை இழந்து பத்மினியின் வீட்டில் தஞ்சமடைகிறார். பத்மினி தனது அப்பாவின் மனைவி என்று தெரியாத சிவாஜி, அவளுடைய நண்பனாக அந்த வீட்டில் இருக்கிறார்.

ஒருநாள் பழைய நினைப்பில் பத்மினியின் கையை சிவாஜி பிடித்துக் கொள்ள பத்மினி அவரை ஓங்கி அடித்து விடுவார்.

இந்த காட்சி படமாக்கப்படும்போது சிவாஜியை அடிக்க பத்மினி தயங்கியபோது, பரவாயில்லை நடிப்புதானே தைரியமாக பண்ணுங்க என்று சிவாஜி கூறியுள்ளார். அதையடுத்து பத்மினி படப்பிடிப்பு தொடங்கியவுடன் சிவாஜியின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

ஒரு அறையோடு விட்டுவிடாமல் மாறி மாறி அறைந்தபோதும், காட்சி சிறப்பாக வருவதை பார்த்த இயக்குனரும் கட் சொல்ல மறந்துவிட்டதால், பத்மினியும் அதிரடியாக சிவாஜியை பார்த்து அறைந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிவாஜியின் முகத்தில் இருந்து ரத்தம் சொட்டிய நிலையில், வலி தாங்கிக்கொள்ள முடியாத சிவாஜி கட் கட் என்று கத்திய நிலையில், படப்பிடிப்பு குழுவினர் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர்.

அதன்பிறகு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அடித்த பத்மினிக்கு ஊசி போட்டு கைகால் அமுக்கிவிட்டுள்ளனர். அடிவாங்கிய சிவாஜியை யாரும் கண்கொள்ளவில்லை என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பலரை போல் சிவாஜி கணேசனும் ஆரம்ப கட்டத்தில் மிகவும் சிரமங்களை அனுபவித்த பின்னரே முன்னேறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top