Close
மே 14, 2024 10:46 மணி

திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மோதி அக்கா-தங்கை உயிரிழப்பு

சென்னை

விபத்தில் 2 பேர் பலி

திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மோதி அக்கா-தங்கை உயிரிழந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப் பட்டனர்.

சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பவானி (38), சுபா (35) ஆகியோர் இருவரும் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.  மேலும் விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூர் ஒண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் பவானி ( 38) சுபா (35) அக்கா,தங்கையான இவர்கள் இப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.  வியாழக்கிழமை இரவு காசிமேட்டில் உள்ள தங்களது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் செல்வதற்காக எண்ணூர் விரைவு சாலையில் ஆட்டோவில் ஏறுவதற்காக சாலையை கடக்க முயன்றபோது எண்ணூரிலிருந்து ராயபுரம் நோக்கி அதிவேகத்தில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து பவானி, சுபா மீது மோதியது.  இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் இருவருக்கும் தலையில் பலத்த காயமடைந்தனர்.

சென்னை
விபத்தில் பலியான பெண்

இதனையடுத்து அருகிலிருந்தோர் உடனடியாக 108 அவசர ஊர்திக்கு  தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்குள் சுபா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பவானி ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சென்னை
விபத்தில் பலியான பெண்

இது பற்றி தகவல் அறிந்து வந்த தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் இருவரின் உடலையும் மீட்டு உடல் கூராய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளிக் கிழமை உடல்கூராய்வுக்குப் பிறகு இருவரது சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் அதிவேகமாக ஓட்டியதோடு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்த பரத் (20),  ஏழுகிணறு சீனிவாச பிள்ளை தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (20) ஆகிய 2 மாணவர்களை செய்து வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் தனியார் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புள்ளிங்கோ’ வை கட்டுப்படுத்துவதில் போலீஸார் மெத்தனம்.,,
இச்சம்பவம் குறித்து திருவொற்றியூர் ஜீவன்லால் நகரைச் சேர்ந்த சமூக சேவகர் குரு.சுப்பிரமணி கூறியதாவது:
வியாழக்கிழமை நடைபெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் உயரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கைது செய்யப் பட்டுள்ளவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது இன்னும் வேதனையளிக்கிறது.

வடசென்னை பகுதியில் ‘புள்ளிங்கோ’  என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் பந்தயம் வெகு சாதாரணமாக நடை பெற்று வருகிறது. அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள் களின் சப்தத்திலேயே சாலையில் செல்வோர் திடீரென நிலை தடுமாறுகின்றனர்.

ஆனால் ‘புள்ளிங்கோ’  பந்தயத்தில் பங்கேற்கும் மோட்டார் சைக்கிள்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் செல்கின்றனர். வியாழக்கிழமை காலை விம்கோ நகரிலிருந்து திருவொற் றியூர் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி வேண்டுமென்றே எதிர் திசையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் களில் வந்த வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஒரு நிமிடம் தடம் மாறியிருந்தாலும் பெரும் விபத்து ஏற்பட்டி ருக்கும். ஆனால் பொதுமக்கள் சுதாரிப்பதற்குள் அந்த இளைஞர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எண்ணூர் விரைவு சாலையில் தினமும் நடக்கும் இந்த அத்துமீறல்களை போக்குவரத்து போலீஸார் கண்டு கொள்வதில்லை. ஆங்காங்கு வைத்துள்ள கண்காணிப்பு கேமராக்களும் தலைக் கவசம் அணியாதது போன்ற குற்றங்களை மட்டுமே பதிவு செய்யும் அவல நிலைதான் உள்ளது.

திருவொற்றியூர் நெடுஞ்சாலை முழுவதும் இரு புறமும் உள்ள நடைபாதைகளை கடைகாரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள் ளனர். சாலையெங்கும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப் படுகின்றன. போக்குவரத்து போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுவதே இல்லை.

ஒட்டுமொத்த போலீஸாரும் எங்காவது ஓரிடத்தில் நின்று கொண்டு வாகனங்களை மறித்து அபராதம் விதிப்பதில்தான் கவனம் செலுத்துகின்றனர். இதற்கு காரணம் ஒரு நாளில் ஒரு ஆய்வாளர் இத்தனை வழக்குகளை பதிவு செய்து குறிப்பிட்ட தொகையை வசூலிக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிடுவதாகவும், இதனால் ரோந்துப் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை.

மேலும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்த போதிய ரோந்து வாகனங்களும் இல்லை என பகிரங்கமாகவே தெரிவிக்கின் றனர். எனவே இப்பிரச்னையில் மாநகர காவல் ஆணையர் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சுப்பிரமணி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top