நாமக்கல்:
10, பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில், 40 பேருக்கு உயர் கல்வியில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை கலெக்டர் வழங்கினார்.
மாவட்டத்தில், 2023-24, 2024-25ம் கல்வியாண்டில், பிளஸ் 2 படித்த மாணவர்கள் அனைவரையும் உயர்கல்விக்கு செல்வதை உறுதி செய்ய, கலெக்டர் தலைமையில், கல்லூரி கனவு, உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை (டோல் ஃப்ரீ நெம்பர்: 18004251997, வாட்ஸ்ஆப் எண்: 9788858794), சிறப்பு குறைதீர் முகாம் என, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
10, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மற்றும் தேர்ச்சி பெறாமல், இது வரை உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்கள், பொருளாதாரம் உட்பட பல்வேறு காரணங்களினால் உயர்கல்விக்கு செல்ல இயலாத மாணவ மாணவிகளுக்காக சிறப்பு குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
பல்வேறு பள்ளிகளில் படித்த, 93 மாணவ, மாணவியர் இந்த சிறப்பு குறைதீர் முகாமில் கலந்து கொண்டனர். அதில், தகுதி வாய்ந்த, 21 பேருக்கு அரசு கலைக் கல்லூரிகளிலும், 12 பேருக்கு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களிலும், 7 பேருக்கு பாலிடெக்னிக் கல்லூரிகள் என, மொத்தம் 40 மாணவ மாணவிகளுக்கு, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி பயில்வதற்கான உத்தரவுகளை கலெக்டர் துர்கா மூர்த்தி வழங்கினார். சிஇஓ மகேஸ்வரி, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




